Monday, April 28, 2025

வானியலில் ஆர்வம் மிக்க வழக்கறிஞர் செந்தில்நாதனும், அவரது வானியல் பற்றிய நூலும்!


எனக்கு  இவருடன் நேரில் பழக்கமில்லை. ஆனால் என் பதின்ம வயதுகளில்  என் கவனத்தை ஈர்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர்.  அதற்குக் காரணம் இவரது வானியல் மீதான ஆர்வம்தான். 

இவரது வீடு கஸ்தூரியார் வீதியில், நாவலர் வீதிக்குச் சிறிது தெற்காக இருந்தது. மாடி வீடு. மொட்டை மாடியில் ஒரு தொலைக்காட்டி எப்பொழுதும்  விண்ணை ஆராய்வதற்குரிய்  வகையில் தயாராகவிருக்கும். அதுதான் என் கவனத்தை இவர் ஈர்க்கக் காரணம்.  அதனால் அந்த வீடு அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண நகரில் முக்கியமானதொரு நில அடையாளமாக விளங்கியது.  

Saturday, April 26, 2025

கிடைக்கப்பெற்றோம் - எழுத்தாளர் ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்'


பதிவுகள்
இணைய இதழில் வெளியான 'நந்தலாலா' ஜோதிகுமாரின் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு, 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் தொகுப்பு  வெளிவந்துள்ளது. இத்தொகுப்பினை சவுத் விஷன் புக்ஸ் (சென்னை) , நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. நூலின் அட்டை ஓவியத்தை வரைந்திருப்பவர் சதானந்தன். நந்தாலா படைப்புகளை வெளிவர் உதவி செய்யும் திரு.சி.ராதாகிருஷ்ணன் இந்நூல் வெளிவருவதற்கும் உதவியுள்ள விபரத்தை ஜோதிகுமார் முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஜோதிகுமார் தனது முன்னுரையில் கட்டுரைகளை வெளியிட்ட பதிவுகள் இணைய இதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார். அதற்காக பதிவுகள் சார்பில்  நன்றி.

இந்நூலில் ஜோதிகுமார் தான் சந்தித்த முக்கிய ஆளுமைகள் சிலரைப்பற்றிய அனுபவங்களை விபரித்துள்ளார். தான் வாசித்த நூல்கள் சிலவற்றைப்பற்றி, அவற்றுக்குப்பின்னால் மறைந்துள்ள அரசியல் பற்றிய தன்  பார்வைகளை  வெளிப்படுத்தியுள்ளார். இலக்கியவாதிகளைப்பற்றி எழுதியிருக்கின்றார். மலையகம் தந்த முக்கிய இலக்கியவாதியான ஸி.வி.வேலுப்பிள்ளையின் சமரசமற்ற போக்கினைப்பற்றி எடுத்துரைத்திருக்கின்றார்.

குறிப்பேடாக விளங்கிய 'சி.ஆர்.கொப்பி' (CR)


எண்பதுகளில் என் உணர்வுகளின் வடிகால்களாக இருந்தவை எழுத்துகளே. அப்பொழுதுதான் மார்க்சிய நூல்களை  வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஒரு வித வெறியுடன் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதுவரை சமூகம், அரசியல், தேசியம் , மதம் என்பவற்றை நான் பார்த்த பார்வையை  மாற்றி அமைத்தன மார்க்சிய நூல்கள். சிந்தனை அதுவரை அடைத்திருந்த  வேலிகளை உடைத்துக்கொண்டு வெளியேறிய காலமது. அப்போது என் உணர்வுகளைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதிக்கொட்டினேன். அவற்றுக்கு வடிகால்களாக இருந்தவை இங்கு நீங்கள் காணும் சி.ஆர் கொப்பிகளே.

நீண்ட பக்கங்களைக் கொண்ட  'கொப்பி'களாக இவை இருந்ததால்  அதிக விபரங்களை ஒரு பக்கத்தில் எழுதுவதற்கு உதவியாக இருந்தன. அதனால் என் பிரியத்துக்குரிய குறிப்பேடுகளாக இவை விளங்கின.

Friday, April 25, 2025

வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்!


வாழ்த்துகள்:
அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான  விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்!  

அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான  விருதினைப் பேராசிரியர் கந்தையா இரமணிதரன் பெற்றுள்ளார்.  வாழ்த்துகள் இரமணி! இவ்விருதினைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு -
https://www.aaees.org/e4saward

தற்போது ஒஹியோ மாநிலத்திலுள்ள 'சென்ரல் ஸ்டேட் 'யுனிவேர்சிடி' (Central State University) இல் சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் குடிசார்ப் பொறியியற் துறையில் இளமானிப் பட்டம் பெற்றவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது. அத்துடன் சீனாவிலுள்ள Hohai University இல் நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் பொறியியற் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர். Tulane University இல் குடிசார்ப்பொறியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.

திருகோணமலையைச் சேர்ந்த இவர் எனக்கு அறிமுகமானது எழுத்தாளராகத்தான்.  பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் அதில் நடைபெற்ற விவாதங்களில் திண்ணைதூங்கி என்னும் பெயரில் அறிமுகமானார். பதிவுகள் விவாத  அரங்கின் இறுதிக்காலத்தில் அதனை என்னுடன் சேர்ந்து நிர்வகிப்பவர்களில் ஒருவராகவும் இருந்தார். திண்ணைதூங்கி, சித்தார்த்த சேகுவேரா என்னும் புனைபெயர்களில் இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள் பதிவுகள் உட்படப் பல்வேறு இலக்கியச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. தொண்ணூறுகளில் வீரகேசரி நடத்திய இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டியிலும் இவரது குறுநாவல் விருதினைப்பெற்றதாக ஞாபகம். பதிவுகளின் படைப்பாளிகளில் ஒருவர் என்னும் ரீதியில் பதிவுகள் சார்பிலும் வாழ்த்துகளைத்  தெரிவித்துக்கொள்கின்றேன்.

Thursday, April 24, 2025

கவிதை: ஏ! விரிவானே! உன்னைத்தான் விரிவானே! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் AI


ஏ! விரிந்திருக்கும் விரிவானே!
நீ எப்போதும் போல் இப்போதும்
என் சிந்தையை விரிய வைக்கின்றாய்.
என் தேடலைப் பெருக வைக்கின்றாய்.

உன்னைப் புரிதல் என் தேடலின் ஊற்று.
உன் விரிவு , ஆழம், தொலைவு
என்னை எப்போதும் வியப்பிலாழ்த்துகின்றன.
வியப்பினூடு விடைகள் எவையும் கிடைக்குமா
என்று முயற்சி செய்கின்றது மனது.

விடைகள் கிடைக்கப்போவதில்லை என்பது
அயர்வினைத் தந்தாலும் உனை, உன் வனப்பை
அயராது இரசிப்பதில் ஒருபோதும் எனக்கு
அயர்வில்லை. அயர்வற்ற இரசிப்புத்தான்.

இருப்பின் இருப்பறிய இருப்பது நீ ஒன்றுதான்
என்கின்றது எப்போதும் தேடிக்கொண்டிருக்கும்
என் நெஞ்சம்.

உன்னில், உன் விரிவில் சஞ்சரித்தவாறு
கீழே பார்க்கின்றேன்.
விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கின்றேன்.
எத்துணை அற்பம்! அற்பத்துக்குள்
எத்துணை அதிசயம்! படைப்பில்
எத்துணை அற்புதம்!
எத்துணை நேர்த்தி!
எத்துணை ஞானம்!

எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவாக....


பொதுவாக ஒருவரின் வாசிப்பனுபவத்தில் பால்ய பருவம், பதின்மப் பருவம், இளமைப்பருவமென்று பருவங்களுக்கேற்ப வாசிப்பனுபவமும் வளர்ந்துகொண்டே செல்லும். சிலரின் எழுத்துகள் மட்டும் அனைத்துப் பருவத்தினரையும் கவரும் தன்மை மிக்கவை. ஆனால் அவற்றின் அர்த்தங்கள் பருவங்களின் மாறுதல்களுக்கேற்ப மாறிக்கொண்டே செல்லும். உதாரணத்துக்கு மகாகவி பாரதியாரின் எழுத்துகளைக் குறிப்பிடலாம்.  

என் பால்ய பருவத்தில்  என் அப்பா வாங்கித் தந்த பாரதியாரின் கவிதைகள் பிடிக்கும். ஆனால் அப்போது நான் இரசித்த அவரது எழுத்துகளை நான் புரிந்து கொண்டதற்கும், பின்னர் வளர்ந்த பின் வாசித்தபோது அடைந்த இன்பத்திற்கும், புரிதலுக்கும் இடையில் மிகுந்த வித்தியாசமுண்டு. அப்போது அவரது சொற்களின் நேரடி அர்த்தம் , இனிமையில் மயங்கிய மனது, பின்னர் வளர்ந்ததும் அவற்றின் பின்னால் மறைந்து கிடக்கும் அர்த்தங்கள் கண்டு பிரமித்துப்போனது.

Sunday, April 20, 2025

கவிதை: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா?. - வ.ந.கிரிதரன் - (ஓவியம் -AI)


துதிபாடல், துதி நாடலால்
துவண்டு கிடக்கிறது
உலகு.

இருப்பின் தன்மை தெரிந்தால்
இதற்கொரு தேவை உண்டா?
இல்லை என்பதை உணரார்
இவர்.

பாதிப்பின் உணர்வுதனை
பரிசுத்தம் கெடாமல் பகர்வீர்.
பண்பாக்கி நடை பயில்வீர்.
பார் போற்றும். ஊர் போற்றும்.
யார்தாம் போற்றார்?

Friday, April 18, 2025

இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான புஸ்பராணி சிதம்பரி மறைந்தார்!


இலங்கைத்  தமிழர்தம் அரசியல் வரலாற்றில் புஷ்பராணி அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. எழுபதுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட பெயர் அவருடையது.  தமிழ் மகளிர் பேரவையில் செயற்பட்ட முக்கியமானவர்களில் ஒருவர். தமிழர் உரிமைப்போராட்டத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்களில் ஒருவர்.  அவரது போராட்ட அனுபவங்களை விபரிக்கும் 'அகாலம்' முக்கியமானதோர் ஆவணம். அவரது மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல்.  அவரது நினைவாக அவரது 'அகாலம்' நூல் பற்றி நான் எழுதியிருந்த கட்டுரையினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

Tuesday, April 15, 2025

கவிதை: சோக்க்ரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -


நாம் மந்தைகள்.
மேய்ப்பர்களை எந்நேரமும் எதிர்பார்த்திருக்கும்
மந்தைகள்.
சொந்தமாகச் சிந்திக்க,
சீர்தூக்கி முடிவுகளை எடுக்க
எமக்குத் திராணியில்லை.
திராணியில்லையா
அல்லது
விருப்பு இல்லையா?

எப்பொழுதும் எமக்காக
யாரோ ஒருவர் எடுக்கும் முடிவுகளை
ஏற்றுக்கொள்வதில் எமக்கும்
தயக்கமெதுவுமில்லை.
தாராளமாக அவற்றை ஏற்றுக்கொள்ளும்
தாராளவாதிகள்
நாம் தாம், வேறு எவர்தாம்?

கருத்துகள் , மேய்ப்பர்களின் கூற்றுகள்
எம்மை உணர்ச்சி வெறியில்
துள்ளிக் குதிக்க வைக்கின்றன.
துள்ளிக் குதிக்கின்றோம்.
இன்பவெறியில் கூத்தாடுகின்றோம்.

ஆயிரம் வருடங்களுக்கு
முன்
சோக்கிரடீசு சொன்னான்:
'சுயமாகச் சிந்தியுங்கள்.
சீர்தூக்கிப் பாருங்கள்.
ஏன் என்று எதிர்க்கேள்வி கேளுங்கள்'
நாம் சிந்தித்தலை இழந்ததை
சோக்கிரடீசு இருந்திருந்தால்
அறிந்திருப்பான்.
அறியாமை கண்டு
ஆரவாரம் செய்திருப்பான்.

எழுத்தாளரும், நடிகருமான சோபாசக்தி மீதான பெண்ணிய அமைப்பின் அறிக்கை பற்றி...



'அதற்கமை பெண்ணியக் குழு / Adhoc Feminist Collective'  வெளியிட்ட  'ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை' அறிக்கை பார்த்தேன். அதன் கீழ் நன்கறியப்பட்ட ஆளுமையாளர்கள் பலர் கையொப்பமிட்டிருந்ததையும் பார்த்தேன். இவ்வறிக்கை பற்றிச் சமூக ஊடகங்களில் பலர் காரசாரமாக விவாதிப்பதையும் பார்க்கின்றென்.  பெண்ணியக் குழு / Adhoc Feminist Collective  வெளியிட்ட  'ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை - https://adhocfeministcollective.blogspot.com/2025/04/blog-post.html

இது முக்கியமான பல குற்றச்சாட்டுகளை எழுத்தாளரும் , நடிகருமான சோபாசக்தி மீது  முன் வைக்கும் அறிக்கை. அவர் சொன்னார், இவ்வறிக்கை பற்றிப் பலரும் தம் கருத்துகளைத்  தெரிவித்து வருகின்றார்கள். சிலர் இதிலுள்ள குற்றச்சாட்டுகளை அப்படியே உண்மைகளாக  ஏற்றுக்கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்விதமாக ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அணுகும் மனப்பான்மை பல மனித உரிமை மீறல்களை உருவாக்க வல்லது. போராட்டக்  காலத்தில் துரோகிகளாக்கப்பட்ட பலர் மீது, அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றின் விளைவுகளை நாம் அறிவோம்.

Sunday, April 13, 2025

கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!


கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவிலிருந்து வெளியான முதலாவது சஞ்சிகை பற்றிப் பலரும் பலவாறு எழுதி வருகின்றார்கள். இவ்விதமான தவறான தகவல்கள் காலப்போக்கில் உண்மையான தகவல்களாகக் கருதப்பட்டு வரலாறு தவறாக எழுதப்பட்டு விடும் அபாயமும் உண்டு.

நானறிந்தவரை கனடாவில் வெளியான சஞ்சிகைகளைக்  கையெழுத்துச் சஞ்சிகைகள், அச்சு வடிவில் வெளியான சஞ்சிகைகள், இரண்டையும் உள்ளடக்கி, வெட்டி ஒட்டல்களுடன் வெளியான சஞ்சிகைகள் எனப் பிரிக்கலாமென்று கருதுகின்றேன்.

தமிழீழ மக்கள்  விடுதலைக்கழகத்தின் கனடாக் கிளை மொன்ரியாலிலிருந்து வெளியிட்ட 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகை   15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. ஓரிரு  இதழ்களில் பத்திரிகைச் செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தாலும், சஞ்சிகை பெரும்பாலும் கையெழுத்துச் சஞ்சிகையாகவே வெளிவந்தது.  எனது மண்ணின் குரல் நாவல், கவிதைகள் சில, கட்டுரைகள் சிலவும் இச்சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. ரவி அமிர்தன், கோமகன், செங்கோடன் எனப் பலரின் படைப்புகளும் இச்சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன.  அடிப்படையில் இது ஒரு போராட்ட அமைப்பின் சஞ்சிகை என்றாலும் தமிழ் இலக்கியத்துக்கும் நாவல், கவிதை, கட்டுரை & கேலிச்சித்திரமெனப் பங்களிப்பு செய்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.

Friday, April 11, 2025

கவிதை: முகநூல்! - வ.ந.கிரிதரன் -



முகநூல் எனக்குப் பலரின் ஆளுமையினைத்
தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
புரட்சிகரமான கருத்துள்ளவர்கள் என்று
நான் நம்பிய பலரின் உண்மைச் சொரூபத்தினை
வெளிப்படுத்தியிருக்கின்றது.
சமூகத்தையே மாற்றிவிடப் போவதாகக்
கூக்குரல் இட்டவர்கள்
அவர்கள்தம் உண்மைச் சொரூபத்தை
முகநூல் வெளிப்படுத்தியபோதும்
நாணவில்லை. ஓடி ஒளியவில்லை.
இன்னும் அவ்வாறே கூக்குரல் இட்டுக்
கொண்டுதானிருக்கின்றார்கள்.
பலர் அற்ப ஆசைகளுக்குள்,
போலிப் பெருமைக்குள்,
மூழ்கிக் கிடப்பதையும் முகநூல்
முற்றாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
கோழைகள் அடையாளங்களை மறைத்து
வீரராக ஆட்டம் போடுகின்றார்கள்.
முகத்தைக் காட்டுவதற்கு அஞ்சும் கோழைகளை
முகநூல் வெளிப்படுத்தியிருக்கின்றது.
நண்பர் என்ற போர்வையில் உலா வந்த பலரை
நட்பின் ஆழத்தைப் புரிய வைத்திருக்கின்றது
முகநூல்.
உள்ளே விடத்தையும்
வெளியில் இனிக்கும் புன்னகையையும்
காட்டும் நல்ல பாம்புகளையும்
முகநூல் சுட்டிக் காட்டியிருக்கின்றது.

கவிதை: ஒரு நூலகத்தின் கனவும், எண்ணத்தோய்தலும்! - வ.ந.கிரிதரன் -

இந்த அற்புதமான நீலவண்ணக் கோள்
எந்தத்திக்கினை நோக்கினும்
மோதல்களினால் பற்றி எரிகின்றதைப் பார்க்கின்றேன்.
நீங்கள் வெளியில் ஒருவருக்கொருவர்
முட்டி மோதிக்கொண்டிருக்கின்றீர்கள்.
இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுகிறதைப்
பார்க்கின்றேன்.
குழந்தைகள், பெண்கள், முதியவர் எவருமே
உங்களுக்கு ஒரு பொருட்டல்ல
என்பதையும் உணர்ந்து கொள்ள வைக்கின்றது
வெளியில் நீங்கள் போடும் வெறியாட்டம்.
உங்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன்.
நீங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் தலைவர் என்பதுபோல்
உங்கள் கூத்திருக்கின்றதைப் பார்த்து நகைக்கின்றேன்.
உங்களுக்கு வெளியில் விரிந்து கிடக்கின்றது
பெரு வெளி.
விரி பெரு மெளனத்தில் புதைந்து கிடக்கும்
உங்களைப் பார்க்கையில்
உங்கள் தனிமையைக் கவனிக்கையில்
எனக்கு உங்கள் மேல் பரிதாபம்தான் வருகின்றது.
 
வெளியில் பேயாட்டம் ஆடும் நீங்கள்
எவ்விதம் இங்கே மெளனமாக,
எவ்வித மோதல்களுமற்று
அருகருகே அமர்ந்திருக்கின்றீர்கள்?
ஆச்சரியம்தான்.

தாமரைச்செல்வியின் முதல் நாவல் 'சுமைகள்'


எழுத்தாளர் தாமரைச்செல்வியின் முதல் நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியான 'சுமைகள்'. தற்போது அந்நாவலும் நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

வேலை வெட்டி இல்லாமல், இளமைக் கனவுகள் பல நிறைவேறாத நிலையில் வாழும் செந்தில் என்னும் இளைஞன், தன்னை நம்பி வந்திருக்கும் தீபா என்னும் பெண்ணையும் தன்னுடன் அழைத்து வீட்டுக்கு வருகின்றான். அவ்விதம் வருபவன் அச்சுமையுடன் , வீட்டுச் சுமைகளையும் துணிவுடன் ஏற்றுக்கொள்கின்றான். வீட்டுச் சுமைகளைத் தீர்த்தவுடனேயே தீபாவுடனான வாழ்க்கை ஆரம்பமாகுமென்று உறுதி செய்துகொள்கின்றான்.

புலமும், நிலமும் பற்றி..


 

"எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்.
யானும் நீயும் எவ்வழி அறிதும்.
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."

(இக்காட்சியினைப் பிரதிபலிக்கும் ஓவியத்தை வரைந்தது AI)

எழுத்தாளர் அருண் செல்லப்பா தன் முகநூற் பதிவில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். "புலம் பெயர்தல் இதன் எதிர்ப் பதம் எதுவாக இருக்கும்.?"

இதற்கு நான் பதிலளித்திருந்தேன்: "புலம் திரும்புதல்."

புலம் மீளல் என்றும் கூறலாம்.

அதற்கு அவர் எதிர்வினையாற்றியிருந்தார் : "நான் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்;; எனவே கனடாதான் எனக்குப் புலம். இதன் மறுவளம் என்ன என்பதே கேள்வி."]

இதற்கு நான் இவ்வாறு பதிலளித்திருந்தேன்: 'புலம் என்றால் அர்த்தம் நிலம். தன் நிலத்தை விட்டுப் பெயர்தலே புலம் பெயர்தல். சங்கப் பாடல்களில் புலம் என்பது நிலம் என்னும் அர்த்தத்திலேயே கையாளப்பட்டுள்ளது.'

அதனை ஏற்று அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்: "உண்மைதான். நில புலம் வைத்திருப்போர், நிலச் சுவாந்தார் என்று தமிழில் சொல்லாடல் வருகின்றது. எனவே எனக்குக் கனடா புலம் அல்ல. புரிகிறது;; நன்றி"

இவர் இவ்விதம் ஆரம்பத்தில் கேட்பதற்குக் காரணம் புலம் என்றால் அது நிலத்துக்கு எதிர் என்று கருதியதால்தான். பலர் அவ்வாறே கருதுவதை நான் அவதானித்திருக்கின்றேன். பலர் கட்டுரைகளில் கூட அவ்வாறே கருதிக் கையாண்டுள்ளதையும் அவதானித்திருக்கின்றேன்.

எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியத்தின் 'அக்கரைகள் பச்சையில்லை'


எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியம் அவரது 'அவர்களுக்கு வயது வந்து விட்டது' நாவல் மூலம் நன்கறியப்பட்டவர். மானுட அனுபவங்களைச் சுவையாக , அனுபவபூர்வமாக விபரிப்பதில் வல்லவர். உதாரணத்துக்கு ஒருவர் குடிக்கும் அனுபவத்தை விபரிக்க வேண்டுமானால், அவ்வனுபவத்தை அனுபவ பூர்வமாக, உயிர்த்துடிப்புடன் விபரிப்பார். அதை வாசிக்கையில் அவ்வனுபவம் நமக்கும் வந்து விடும்.


இந்நாவல் பல அக்காலகட்டத்தகவல்களையும் தருகின்றது. உதாரணத்துக்கு ஒன்று - திருகோணமலைத் துறைமுகத்திலுள்ள மாதவன் நாயரின் தேநீர்க் கடை பற்றி வருகின்றது. கதை கற்பனைக் கதையானாலும் அக்காலத்தில் கேரளத்து நாயர்களும் அங்கு தேநீர்க் கடை போன்ற வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதனால்தான் மாதவன் நாயர் என்னும் பாத்திரமும் நாவலில் வருகின்றது என்றே நான் கருதுகின்றேன். இது தவறென்றால் அறிந்தவர்கள் அறியத் தரவும்.

இளைஞர்களே! சிந்திக்கச் சில சிந்தனைகள்!


இங்குள்ள காணொளியை முழுமையாகப் பார்க்கவும். இந்த இளைஞர் கள்ள வழியில் கனடா செல்ல முற்பட்டு அழைந்த இன்னல்களை, இழந்த சொத்துகளைப் பற்றி இதில் விபரிக்கின்றார். இவ்வகையில் இது பயனுள்ள காணொளி. காணொளிக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=q4Y5Z-JdscU

ஆனால் முடிவில் இவர் கூறுகின்றார் வெளிநாடு  போவதானால்  சட்டபூர்வமான வழிகளில் செல்லுங்கள் என்று. அது சரியானது. ஆனால் இவ்வளவு இன்னல்களை அடைந்த பின்னும் இவருக்கு  வெளிநாடு செல்லும் ஆசை நீங்கவில்லை என்பதையும் அது புலப்படுத்துகிறது.

போர்ச்சூழல் நிலவிய காலத்தில் ஒருவரின் இருப்பே கேள்விக்குரியதாக மாறிய சூழலில் மக்கள் அகதிகளாக வெளியேறினார்கள். கிடைத்த வழிகளில் வெளியேறினார்கள். அச்சூழலின் விளைவு அது. 

Thursday, April 10, 2025

ஸ்டார் வெளியிட்ட Brand New Planet சிறுவர் பத்திரிகை!


என் மூத்த மகள் தமயந்தி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த  சமய்ம் டொராண்டோவிலிருந்து வெளியாகும் டொராண்டோ ஸ்டார் பத்திரிகை Brand New Planet என்னுன் சிறுவர்களுக்கான பத்திரிகையை வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. அதில் அவர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான ஊதியத்தையும் பத்திரிகை நிறுவனம் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தது, ஒரு தடவை அவரை வைத்துக் Cover Story  செய்ய வேண்டுமென்று ஸ்டார் பத்திரிகை விரும்பியது. அதற்காக ஒரு புகைப்படக்காரரையும் அனுப்பி வைத்தது.  

Monday, March 31, 2025

தன் கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறும் உரிமை சவுக்கு சங்கருக்குண்டு!


நான் சவுக்கு சங்கரின் அபிமானி அல்லன். அவ்வப்போது அவரது சவுக்கு மீடியாக் காணொளிகளைப் பார்ப்பவன். ஆனால் சனநாயக நாடான இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஊடகவியலாளர்  ஒருவர் தன் கருத்துகளைச் சுயமாக எடுத்துரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அவரது கருத்துகளை, அவை எவ்வளவு எதிரானவையாக இருந்தாலும் அவற்றைக் கூறும் உரிமை அவருக்குண்டு. கருத்தைக் கருத்தால்தான் எதிர்க்க வேண்டும். வன்முறையால் அல்ல. எம் போராட்ட வரலாற்றில் கருத்துகளை வன்முறை கொண்டு அடக்கினோம். அதன் விளைவுகளை நாம் அறிவோம்.

சவுக்கு சங்கர் தன் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அவரது வீட்டின் மீது அவரது கருத்துகள் திரிக்கப்பட்டு,  துப்புரவுத் தொழிலாளர்கள் சிலரை அவருக்கெதிராகத் திசை திருப்பி அவர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டிருக்கின்றார்.  சட்டம் தன் கடமையினைச் செய்தால் இதன் உண்மை நிலை வெளிப்படும். உண்மையில் அவரது வீட்டைத் தாக்கியவர்கள் துப்புரவுத்  தொழிலாளர்களா அல்லது அப்போர்வையில் வந்த அடியாட்களா என்பதைப் பாரபட்சமற்ற விசாரணைகள்தாம் வெளிப்படுத்தும். நிரூபிக்கும். இச்சந்தேகம் அவருக்கும் இருப்பதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்த அவருடனான நேர்காணற் காணொளியொன்றில் பார்த்தேன்.

சவுக்கு சங்கர் தன் குரலைச் சுதந்திரமாக ஒலிப்பதற்குரிய உரிமை நிலைநாட்டப்பட வேணடும். மீண்டும் அவர் தனக்குப் பிடித்த ஊடகத்துறையில் சுதந்திரமாக ஈடுபடும் நிலை ஏற்படுமென்று எதிர்பார்ப்போம்.

மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும்  தமிழக் கலை, இலக்கிய & அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் என்ன நிலையினை எடுக்கப்போகின்றார்கள் என்பதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.

Tuesday, March 25, 2025

நடிகர் மனோஜ் மறைந்தார்!


முகநூல் எதிர்பாராத செய்திகளைத்  தாங்கி வர ஒரு போதும் தவறுவதில்லை. அவ்விதம் இன்று  முகநூல்  தாங்கி வந்த செய்திதான் நடிகர் மனோஜின் மறைவுச் செய்தி.  நான் இவரது தீவிர இரசிகன் அல்லன். உண்மையில் இவரது திரைப்படங்களைக்கூட இதுவரையில் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் நான் இவர் நடித்த திரைப்படப்பாடல்களின் காணொளிகள் பலவற்றை அதிகமாகப் பார்த்திருக்கின்றேன். இரசித்துக்கொண்டிருப்பவன். குறிப்பாக இவரது 'வருசமெல்லாம் வசந்தம்' திரைப்படப்பாடல்கள் மிகவும் பிடித்தவை. குறிப்பாக உன்னிமேனன் குரலில் ஒலிக்கும் 'எங்கே அந்த வெண்ணிலா'  பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இப்பாடல்களில நடித்திருக்கும் மனோஜின் இயல்பான தோற்றம், நடிப்பு குறிப்பாக மனத்தைக் கவரும் அந்தப் புன்சிரிப்பு இவற்றினை நான் இரசிப்பவன்.

கதாநாயகனாக  இவரால் ஏனைய  திரைப்பட வாரிசுகளைப்போல் சுடர் விட முடியாமற் போயிருந்தாலும் , நடிகர் ரகுவரன் போல்  தனித்துவம் மிக்க, குணச்சித்திர நடிகராக  நிலைத்து நிற்கக் கூடிய ஒருவர் இவர் என்று நினைப்பதுண்டு.

நடிப்பு தவிரத் திரைப்பட  இயக்கத்திலும் இவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்னும் சாதிப்பதற்கு இவருக்குக் காலம் இருந்த நிலையில் ,இந்த வயதில் இவர் மறைந்திருப்பது துயரமானது. இருப்பின் நிலையற்ற தன்மையினை மீண்டுமொரு தடவை எமக்கு உணர்த்தி நிற்பது. ஆழ்ந்த இரங்கல்.

இவரது நினைவாக, இவர் நடிப்பில் என்னைக் கவர்ந்த சில பாடல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

எங்கே அந்த வெண்ணிலா - https://www.youtube.com/watch?v=knkNX-_Zp5w
முதன் முதலாய் உன்னைப் பார்க்கிறேன் - https://www.youtube.com/watch?v=Cph4grc2l_U
சொல்லாதே சோலைக்கிளி  - https://www.youtube.com/watch?v=rDzFFHdEoEA
எந்த நெஞ்சில் - https://www.youtube.com/watch?v=kg4uCisk_2Q
ஈச்சி எலுமிச்சி - https://www.youtube.com/watch?v=Iklj9CFFmEw

Monday, March 24, 2025

க்ரியா ராமகிருஷ்ணனும் , ரோஜா முத்தையா நூலகத்துக்கான அவரது பங்களிப்பும், அது பற்றிய பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் உரையும்! - வ.,ந.கிரிதரன் -


அமரர் க்ரியா ராமகிருஷ்ணனின் தமிழ்ப் பதிப்பகத்துறைக்கான பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. க்ரியா என்றால் தரம் என்னும்சொல் நினைவுக்கு வரும். தேர்தெடுத்த தரமான தமிழ் நூல்களை, ஏனைய மொழிகளில் வெளியான தமிழ் மொழிபெயர்ப்புகளைக் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. நூல் வெளியீட்டுடன் , க்ரியா பதிப்பகத்தின் அகராதித்துறைக்கான பங்களிப்பும் முக்கியத்துவம் மிக்கது. நூல்வெளியீடு, அகராதித் துறைப் பங்களிப்பு  இவற்றுடன் இன்னுமொரு முக்கிய பங்களிப்புக்காகவும் க்ரியா ராமகிருஷ்ணன் நினைவு கூரப்படுகின்றார். நினைவு கூரப்பட வேண்டும். அது ரோஜா முத்தையா நூலகத்துகான அவரது பங்களிப்பு.

Thursday, March 20, 2025

நூல் அறிமுகம் - சார்பியல் தத்துவம் என்றால் என்ன?


லெ.லந்தாவு, யூ.ரூமர் என்னுமிருவர் எழுதிய ,சார்பியல் த்த்துவத்தின் முக்கிய அம்சமான சார்புத்தன்மையைப்பற்றிய ,   மிகவும் எளிமையாகச் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும வகையில் எழுதப்பட்டுள்ள நூல் 'சார்பியல் தத்துவம் என்பது என்ன?' என்னும் இந்நூல். இதனைத் தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் ரா.கிருஷ்னையா.

சார்பியல் தத்துவம் சிறப்புச் சார்பியல் தத்துவம், பொதுச் சார்பியல் தத்துவம், வெளி, நேரமாம் சார்பானவை, காலவெளி ஒருபோதும் பிரிக்கப்பட  முடியாதது, புவியீர்ப்பு என்பது காலவெளியில் பொருளொன்றின் திணிவு ஏற்படுத்தும் கேத்திரகணித விளைவு போன்ற சார்பியல் தத்துவத்தின் முக்கிய அம்சங்களை  இந்நூல் கவனத்தில் எடுக்காதது துரதிருஷ்ட்டமானது. அவற்றையும் உள்ளடக்கியிருந்தால் இந்நூல் இன்னும் சிறப்புடையதாகவிருந்திருக்கும்.

இருந்தாலும் மேலோட்டமாக அதே சமயம் எளிமையாகச் சார்பியல் தத்துவம் கூறும் சார்புத்தன்மையைப்பற்றி நூல் சாதாரண பொதுமக்களுக்கு விபரிக்கின்றது.  வாசகர்கள் சாதாரணப் பொதுமக்கள்  என்பதால் நூலாசிரியர்கள் சார்பியல்  தத்துவத்தின் அடிப்படை அம்சங்களான, மேலே நான் குறிப்பிட்டவற்றைத்தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.

நூலின் தொடக்கத்தில் வரும் பின்வரும் கூற்று என் கவனத்தை ஈர்த்தது. அதற்குக் காரணம் இதனைக் கூறியவர்தான்.

                                 நவீன ருஷ்யாவின் தந்தையான வி.இ.லெனின்
 

"..ஐயப்பட்டுக்கு இடமின்றி எப்படி இயந்திரவியலானது மெதுவான, மெய்யான இயக்கங்களது 'நொடிப் படப்பிடிப்பய்' இருந்ததோ, அதே போல் புதிய பெளதிகவியல் காவிய அளவிலான பிரம்மாண்ட வேகமுடைய   மெய்யான இயக்கங்களின் நொடிப் படப்பிடிப்பாய் இருக்கிறது.... பருப்பொருளின் கட்டமைப்பையும் அதன் இயக்க வடிவங்களையும் பறறிய நமது அறிவு மாறும் தன்மையதாய் இருப்பதானது புற உலகின் எதார்த்த மெய்மையைப பொய் யென எப்படி நிரூபிக்கவில்லையோ, அதே போல் விசும்பையும் காலத்தையும் பற்றிய மானுடக் கருத்தோட்டங்கள் மாரும் தன்மையானவாய் இருப்பதானது எதார்த்த மெய்மையைப் பொய்யென நிரூபித்து விடவில்லை...."

Saturday, March 15, 2025

கலைஞர் மு.கருணாநிதியின் தமிழ்மொழிப் பங்களிப்பு - குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா & திருக்குறள் உரை!


கலைஞர் மு.கருணாநிதியின்  குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா. திருக்குறள் உரை  & சங்கத்தமிழ்த் தொகுப்புகளை அவரது முக்கிய தமிழ்மொழிப்பங்களிப்புகளாக நான் கருதுகின்றேன். இவற்றுடன் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் எழுதிய நாடகம், அதனையொட்டி வெளியான பூம்புகார் திரைப்படம்  இவையும் முக்கியமானவை. பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை வசனத்துக்குத்  திருப்பியதில் கலைஞரின் வசனங்கள் முக்கியமானவை. பராசக்தி, மனோஹரா, ராஜாராணி & பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை. 

 

அவர் ஆட்சியில் அமைத்த வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அமைத்த வள்ளுவர் சிலை இவையும் முக்கியமான  பங்களிப்புகள். இவை தவிர அவரது பல படைப்புகள் புனைகதைகளாக, அபுனைவுகளாக, நாடகங்களாக & திரைக்கதைகளாக வெளிவந்துள்ளன.  ரோமாபுரிப்பாண்டியன், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் - சங்கர் ஆகியவை முக்கியமான வரலாற்றுப் புனைவுகள். பல பாகங்களாக் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி சுயசரிதையும் முக்கியமான  தொகுப்புகள்.

Friday, March 14, 2025

அறிஞனே! நீ வாழி!


மானுட சிந்தனையாற்றலின் வலிமையினை உணர்த்தும் ஆளுமையாளர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன். அவரது காலம் வரை நிலவி வந்த வெளி, நேரம், புவியீர்ப்பு பற்றிய கோட்பாடுகளை ஆட்டங்காண வைத்தவை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள். 
 
இவற்றை இவர் ஏனைய அறிவியல் அறிஞர்கள் போல் பரிசோதனைக் கூடங்களில் பரிசோதனைகள் செய்து ,அவற்றின் மூலம் நீருபிக்கப்பட்ட முடிவுகளாகக் கண்டறியவில்லை. தன் சிந்தனையாற்றலின் மூலம், சிந்தையென்னும் பரிசோதனைக்கூடத்தில் கண்டறிந்தார்.
 
பின்னரே பல வருடங்களின் பின்னரே பரிசோதனைகள் மூலம் அவை உண்மைகளாக நிரூபிக்கப்பட்டவை. 
 
இன்று, மார்ச் 14, அவரது பிறந்ததினம். 
 
என் சிந்தையைப் பாதித்த அறிவியல் ஆளுமையாளர்களில் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனுக்கும் முக்கிய இடமுண்டு.
 
அறிவியல் அறிஞன் இவனது
காலம் வெளி பற்றிய கோட்பாடுகள்
ககனத்தின் இருப்புப் பற்றிய ,நிலவிய
கோட்பாடுகளை
ஆட்டங்காண வைத்தவை.
அடியோடு ஆட்டங்காண வைத்தவை.
சிந்தையில் சோதனைகள் செய்தே
சரி, பிழை அறிந்தான்.
சிந்தனை ஆற்றலின் சக்தியினைச்
மானுடர் நாம் அறிய வைத்தான்.
மகத்தான மனிதனிவன்
பிறந்ததினம், மார்ச் 14, இன்று.
போற்றுவோம்! நினைவு கூர்வோம்!
இருப்புப் பற்றிய
என் புரிதலுக்கு உன்
இருப்பு மூலம்
அறியத் தந்தாய்!
அறிஞனே! நீ வாழி!

Wednesday, March 12, 2025

எம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த குரலுக்குரியவர் பாடகர் டி.எம்.எஸ்!


எம் தலைமுறையினரின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஆளுமைகளில் தமிழ்ச் சினிமாப் பாடகர்களும் அடங்குவர். அவர்களில் டி.எம்.எஸ் முக்கியமானவர். அவரது குரலுடன் நாமும் வளர்ந்தோம். கனவுகள் கண்டோம். துயரத்தில் ஆழ்ந்தோம். மகிழ்ந்தோம். இன்பத்தில் ஆடினோம். 
 
அவரது இக்காணொளி எவ்விதம் இதுவரை என் கண்களில் படாமல் ஒளிந்திருந்தது?
இதில் அவர் தான் பாடகராக எவ்விதம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார் என்பதை விபரிக்கின்றார். அக்காலகட்டச் சென்னை வாழ்க்கையின் நிலையினை விபரிக்கின்றார். அவரது சினிமா வாழ்க்கைக்கு நடிகர் திலகம் எவ்விதம் முக்கிய காரணமாக விளங்கினார் என்பதை எடுத்துரைக்கின்றார். எவ்விதம் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் தன் வெற்றிக்குக் காரணமானவர்களாக இருந்தார்கள் என்பதை நினைவு கூர்கின்றார். அவர் எவ்விதம் பாடல்களைப் பாடுகின்றார் என்பதை விளங்கப்படுத்துகின்றார். அற்புதமான காணொளி. காணொளியைப் பார்க்கையில், கேட்கையில் இன்பம் பொங்குகின்றது. நல்லதொரு காணொளி. டி.எம்.எஸ் என்னும் ஆளுமையினை நன்கு வெளிப்படுத்தும் காணொளி.

Friday, March 7, 2025

மிகுல் டீ செர்வான்டீஸின் 'டொன் கியூடே' - முதலாவது நவீன நாவல்!


நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல்  மிகுல்  டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra) எழுதிய் புகழ் பெற்ற ஸ்பானிஸ் மொழி நாவலான 'டொன் கியூடே அல்லது டொன் கியூடி' (Don Quixote) பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இரு பாகங்களை உள்ளடக்கிய நாவல் தமிழில் 'டான் குயிக்ஸாட்' என்னும் பெயரில் நற்றிணைப் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. நாவலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார் பேராசிரியர் சிவ முருகேசன்.

இந்நாவலைப் பற்றிய என் குறிப்பினை வாசிக்கையில் , குறிப்பாக  நீங்கள் இலங்கைத் தமிழராக இருக்கும் பட்சத்தில் , நிச்சயம் உங்களுக்கு ஒருவரின் நினைவு தோன்றலாம். அப்படித்தோன்றினால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லன்.

டொன் கியூடே நாவல் இலக்கியத்தில் சுவையான, மறக்க முடியாத கதா நாயகர்களில் ஒருவன். இந்நாவல் அவனது சாகசப்பயண அனுபவங்களை விபரிப்பது.

நாவலின் கதை இதுதான்: டொன் கியூடே வாசிப்பதில் ஆர்வம் மிகுந்தவன். அவன் வீர தீரச் செயல்கள் மிகுந்த சாகசக் கதைகளை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவன். அவனது வாசிப்பின் விளைவாக அவன் தன்னை ஒரு சாகச வீரனாகக் கற்பனை செய்து கொள்கின்றான். உலகைக் காக்க வந்த ஒரு வீரனாக எண்ணிக்கொள்கின்றான். அந்த கற்பனை உலகையே அவன் உண்மையான உலகாக எண்ணி, நிசத்துக்கும் , நிழலுகுமிடையில் நிலவும் வேறுபாட்டினை உணராது செயற்படுகின்றான்.

Thursday, March 6, 2025

சிறுகதை: ஒரு முடிவும் விடிவும் - வ.ந.கிரிதரன் -


மணிவாணன் என்னும் பெயரில் தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் எழுதிய என் ஆரம்ப காலச் சிறுகதைகளிலொன்று இந்தச் சிறுகதை. தொண்ணூறுகளில் தாயகம் பத்திரிகையாக வெளியானபோது வெளியான சிறுகதை.


அக்காலகட்டத்தில் மணிவாணம் என்னும் பெயரில் மேலும் சில சிறுகதைகளும், 'கணங்களும், குணங்களும்' நாவலும் எழுதியிருந்தேன்.


*************************************************************************

மெல்லமெல்ல இருண்டு கொண்டிருக்கிறது. அந்தியின் அடிவானச் சிவப்பில் சிலிர்த்துப் போன கதிரவன் பொங்கி எழுந்த காதலுடன் அடிவானைத்தழுவித் தன்னை மறந்து கொண்டிருந்தான். பரந்து விரிந்து அமைதியில் இருந்தது குளக்கரை, பறவைகள் கூட்டம் கூட்டமாய் தத்தமது உறைவிடங்கள் நாடிப்பறந்த வண்ணம் இருந்தன. இந்த நேரத்திலும் சில மீன் கொத்திகள் பேராசையுடன் இரைக்காக அருகில் உள்ள மரக்கொப்பொன்றில் காத்துக்கிடந்தன. அமைதியில்இதமாக தென்றல் வீசியபடி இருந்தது.

குளக்கரையில் மேட்டில் பரந்திருந்த புற்றக்கரையில் அலைந்து கொண்டிருந்த குழந்தையின் மேல் கையும் விரிந்திருந்தநீர்ப்பரப்பில் பார்வையுமாக யமுனா கூர்ந்த பார்வை. அகன்ற நெற்றி. அடர்ந்திருந்த கூந்தலைமுடிந்துவிட்டிருந்தாள்.

சாதாரணநாற்சேலையில் செக்கச்சிவந்த உடல்வாகு. எந்நேரமும் கனவு காணும் அந்த அழகான கண்களில். அந்தச் சோகம் படர்ந்திருந்தது.

Friday, February 28, 2025

அலெக்சாந்தர் புஷ்கினின் 'காப்டன் மகள்'



அலெக்சாந்தர் புஷ்கின் (அல்லது அலெக்சாந்தர் பூஷ்கின்) நவீன ருஷிய இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர்.  கவிதை, நாடகம், நாவலென இலக்கியத்தில் கால் பதித்தவர்.  இவரது புகழ்பெற்ற நாவலான 'காப்டன் மகள்'  இவரது கடைசி நாவல். இதனை ராதுகா பதிப்பகம், மாஸ்கோ நா.தரமராஜனின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பிலும் 'காப்டன் மகள்'என்னும் பெயரில் கவிதா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இங்கு நான் பகிர்ந்து கொள்வது இணையக் காப்பகத்திலுள்ளது. நா.தர்மராஜனின் மொழிபெயர்ப்பில் வெளியானது.

Wednesday, February 26, 2025

எனது எழுத்துகளைப்பற்றிய செயற்கை அறிவுத் திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில உரையாடல்கள்! - வ.ந.கிரிதரன் -


எனது படைப்புகளைப்பற்றிய செயற்கை அறிவுத்  திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில மொழியிலான  உரையாடல்களை இங்கு நான் பட்டியலிடுகின்றேன். இங்கு உரையாடப்படும் என் படைப்புகளின்  ஆங்கில மொழி பெயர்ப்புகளைச் செய்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்.

இங்குள்ள படைப்புகளில் சிறுகதைகளைப் பற்றிய உரையாடல்களை எனது V.N.Giritharan Podcast என்னும் யு டியூப் சானலில் கேட்கலாம். நாவல்களுக்கான உரையாடல்களை என் முகநூற் பக்கத்திலும் , இணையக் காப்பகம் தளத்திலும் கேட்க்லாம்.

செயற்கை அறிவினை மானுடர் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவதால் நன்மையுண்டு என்பதை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை. இவற்றைச் சாத்தியமாக்கியது Google NotebookLM. அதற்காக அதற்கு என் மனம் நிறைந்த நன்றி.
 
இச் சானலுக்கான முகவரி - https://www.youtube.com/@V.N.GiritharanPodcast

சிறுகதைகள்:

கணவன் (Husband) - https://www.youtube.com/watch?v=BSWen8-qdvA&t=15s
மான்ஹோல் (Manhole) - https://www.youtube.com/watch?v=DF6YX6pDHKc
சுண்டெலிகள் (Mice) - https://www.youtube.com/watch?v=QbcPKR_jAm8&t=10s

நாவல்கள்

அமெரிக்கா (America) -

https://www.youtube.com/watch?v=9nATHcXH5nI
https://archive.org/details/novel-america-by-v.-n.-giritharan

குடிவரவாளன் (An Immigrant)

https://www.youtube.com/watch?v=YH3QoanB1Gg    
https://archive.org/details/novel-an-immigrant-by-v.-n.-giritharan

Tuesday, February 25, 2025

சிறுகதை: மான்ஹோல் - வ.ந.கிரிதரன்

 

கனடாவிலிருந்து வெளிவந்த 'தேடல்' சஞ்சிகையில் வெளியான எனது சிறுகதை 'மான்ஹோல்' . அச்சிறுகதையினை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்துள்ளார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான லதா ராமகிருஷ்ணன்.

மேற்படி  சிறுகதையைப்பற்றி Google NotebookLM இன் செயற்கை அறிவுத்  திறனாய்வாளர்கள் உரையாடுகின்றார்கள். அவ்வுரையாடலே இங்குள்ள காணொளி.

எனது யு டியூப் சானலான V.N.Giritharan Podcast இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொளியிது. 

சிறுகதையை வாசிக்க - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/manhole-v-n-giritharan-translation-by-latha-ramakrishnan/




 

Sunday, February 23, 2025

எனது யு டியூப் சானல் 'V.N.Giritharan Podcast'


நண்பர்களே! V.N.Giritharan Podcast என்னும் யு டியூப் சானலை ஆரம்பித்துள்ளேன்.
இங்கு 'கூகுள் நோட்புக் எல்எம்' (Google notebookLM) மூலம் உருவாக்கப்படும் காணொளிகள் பதிவேற்றப்படும். 
 
இங்கு எனது எழுத்துகளின் ஆங்கில மொழிபெயர்புகளை மையமாக வைத்து ,செயற்கை அறிவினால் உருவாக்கப்பட்ட இருவரின் உரையாடல்கள்  இடம் பெறும். 
 
இச் சானலுக்கான முகவரி - https://www.youtube.com/@V.N.GiritharanPodcast
 


 

Friday, February 21, 2025

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'



உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' போன்ற நூல்கள் பலவற்றை வாசித்திருக்கின்றேன். கலைஞர் மு.கருணாநிதியின் 'ரோமாபுரிப்பாண்டியன்', 'வெள்ளிக்கிழமை' போன்ற புதினங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவரது சிலப்பதிகாரத்தை மையமாகக்கொண்ட நாடகத்தினை வாசித்திருக்கின்றேன். அவ்வப்போது பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான கட்டுரைகள், கவிதைகளை வாசித்திருக்கின்றேன். பெரியாரின் நூல்களைப் பெரிதாக வாசித்திருக்காவிட்டாலும் அவரைப் பற்றிய அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்றோரின் எழுத்துகளூடு அவரை அறிந்திருக்கின்றேன்.


அண்மைக்காலமாகத் தமிழகத்தில் 'நாம் தமிழர்' கட்சியினரின் பெரியார், திராவிடம்,கலைஞர் ஆகியோர் பற்றிய கடுமையான விமர்சனங்கள் பெரியாரின் எழுத்துகள், கலைஞரின் எழுத்துகள், அறிஞர் அண்ணா போன்ற ஏனையோரின் எழுத்துகள் பக்கம் என் கவனத்தைத் திருப்பின.

இவ்வகையில் கலைஞரின் சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி' யை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இன்று இவ்வளவு 'நாம் தமிழர்' கட்சியினரின் தூற்றுதல்களுக்கு உள்ளாகியிருக்கும் கலைஞரின் கடந்த கால வாழ்க்கை எப்படியிருந்தது? எவ்விதம் அவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகளில் ஒருவராக உருவானார் என்பதை அதன் மூலம் அறியலாம் என்று தோன்றியது. 'நெஞ்சுக்கு நீதி' பல பாகங்களை உள்ளடக்கிய சுயசரிதை.

Tuesday, February 18, 2025

அறிஞர் அண்ணாவின் உரை: இந்தி இணைப்பு மொழியாக இருக்க முடியுமா?


அறிஞர் அண்ணா அவரது புலமையின் காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவர். அவர் சிறந்த பேச்சாளர். அவரது காலத்தில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் அவர்தான். கணீரென்ற குரலில் கேட்பவரை கட்டுப்படுத்திவிடும் குரல் அவரது குரல்.
இந்த உரையில் அவர் இந்தி மொழியின் அவசியம் என்ன என்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றார். அதை மக்களுக்கு விளங்கப்படுத்த அவர் ஆற்றிய உரை ஒவ்வோர் பேச்சாளரும் கேட்க வேண்டிய உரை. எவ்விதம் ஓர் உரையினைத் தெளிவாக, நிதானமாக, சுவையாக, அறிவு பூர்வமாக, தர்க்கபூர்வமாக உரையாற்றுகின்றார் என்பதைக் கவனியுங்கள். எவ்விதம் தன்னுரையால் அவையோரைக் கட்டிப்போட்டு விடுகின்றார் என்பதையும் அவதானியுங்கள். 
 
இவ்வுரையில் அவர் தமிழ் மொழி, தாய் மொழியின் அவசியம், இணைப்பு மொழி போன்ற பல விடயங்களைப்பற்றி விபரிக்கின்றார். இணைப்பு மொழியாக இந்திக்குப் பதிலாக ஏன் ஆங்கிலம் இருக்க வேண்டுமென்று தெளிவாக, தர்க்கபூர்வமாகத் தெளிவு படுத்துகின்றார். இன்றுள்ள தலைமுறை யு டியூப்பின் வம்பளப்புகளில் நேரம் செலுத்துவதை விட இது போன்ற அறிஞர்களின் உரைகளைக் கேட்க வேண்டும். 

Monday, February 17, 2025

ஆய்வாளர் மன்னர் மன்னனின் திராவிடம் பற்றிய கருத்துகள் பற்றி.....

 - ஆய்வாளர் மன்னர் மன்னன் -


அண்மையில் யு டியூப் காணொளி ஒன்று பார்த்தேன்.  ஆய்வாளார் மன்னர் மன்னனுடையது.  Saattai  யு டியூப் சானலிலுள்ள நேர்காணல். இதனைத் தனது தர்க்கங்களுக்கு ஆதாரங்களாகக் காட்டும் தமிழகத்தைச்  சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் என் முகநூற் பதிவொன்றுக்கான எதிர்வினையாகப்  பகிர்ந்துகொண்டிருந்தார். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=507VJQgMg68

சரி உதவிப் பேராசிரியர் பகிர்ந்திருக்கின்றாரே இவர் என்னதான் கூறுகின்றாரென்று பார்ப்போமே என்று பார்த்தேன். இதில் அவர் கூறிய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. அவற்றைப் பட்டியலிடுகின்றேன்.

Saturday, February 15, 2025

பெரியார் என்னும் மகா மனிதர்!


பெரியார் திருமணத்தை எதிர்த்தாராம்..

அதனால்
பெரியார் குடும்பத்தை எதிர்த்தாராம்.
மனிதர் மிருகங்கள் போல்
மாறி மாறி உறவு கொள்ளலாமாம் என்றாராம்.
மூடரே!
பெரியார் எதிர்த்தது குடும்பத்தை அல்ல.
பின்
திருமணம் என்னும் சடங்கை.
ஏன்?
அது பெண்ணை அடிமையாக்கியது
என்பதனினால்.
சடங்கைத்தான் எதிர்த்தார்.
சேர்ந்து வாழ்ந்து சந்ததி
பெருக்கும் அன்புமிகு
உறவை அல்ல.

சடங்கை ஏன் எதிர்த்தார்.
சடங்கு எப்படி பெண்ணை
அடிமையாக்கியது?

வெள்ளைக்காரன் சட்டம் போடும் வரைக்கும்
வெங்காயங்களே
பெண்களை உடன் கட்டை ஏற்றினார்களே
ஏன்? அந்தச் சடங்கால்தானே.
அதனால்.

ஆதாரங்கள்!



அரசியல் ஆய்வாளர்  
அவர்.
அவரது கூற்றுக்கு
ஆதாரம் வேண்டும் என்றேன்.
அதற்கு
ஆதாரமா
பாரிஸ் தமிழச்சியின்
 யு டியூப்  வீடியோ
பார்க்கவில்லையா என்றார்.
பரிதாபமாக வேறு என்னைப்
பார்த்தார்.

உதவிப் பேராசிரியர் ஒருவர்.
ஆதாரம் கேட்டேன்.
இரண்டு யு டியூப் காணொளிகள்
இவையயே சான்றுகள் என்றார்.

இனி இவர்கள்
AI பெரியார்
AI  கலைஞர்
எல்லாரையும்
எடுத்து வருவார்கள்
ஆதாரங்களாக.

நாம் எங்கே போகின்றோம்?



Tuesday, February 11, 2025

ஏ தாழ்ந்த தமிழகமே!


அறிஞர் அண்ணா 1945இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு நிகழ்வில் கவிஞர் பாரதிதாசனின் உருவப்படத்தைத்திறந்து வைத்து ஆற்றிய உரை. இது 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. அறிஞர் அண்ணா திறமையான பேச்சாளர். சிந்தனையாளர். ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடுகளாக, தர்க்கச் சிறப்பு மிக்கவையாக அவரது உரைகள் இருக்கும். 1947 தொடக்கம் 1967 வரை திமுக ஆட்சியை பிடிக்கும் வரையிலான காலகட்டம் தமிழகத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் மத்தியில் முக்கியமான காலகட்டம் .

சம்த்துவம், சுயமரியாதை, சம்நீதி, பகுத்தறிவு இவற்றை மையமாகக் கொண்டு திமுக இயங்கியது. கலை, இலக்கிய வடிவங்கள் அனைத்தையும் மிகத்திறமையாகக் கையாண்டு ஆட்சியைப் பிடித்த வேறொரு கட்சி திமுக  போன்றேதும் உண்டா? தெரியவில்லை.

சினிமா, நாடகம், நாவல்ம் கட்டுரை என்று கலை, இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் தம் கருத்துகளைப் பரப்பினார்கள்.  சினிமாவைப் பொறுத்த வரையில் திமுகவை மக்களிடத்தில் கொண்டு சென்றதில் அறிஞர் அண்ணாவின் எழுத்துகள், உரைகளுக்கு பெரும்பங்குண்டு. எம்ஜிஆருக்கு முக்கிய பங்குண்டு. கலைஞரின் நாடகங்கள், பராசக்தி போன்ற திரைப்படங்களுக்கும் முக்கிய பங்குண்டு.

வரலாறு அறிவோம்: விவேகியின் 'ஐக்கிய திராவிடம் ' நூல் வெளிப்படுத்தும் பெரியார் பற்றிய விபரங்கள்.

'

ஐக்கிய திராவிடம் - விவேகி - யூலை 1947இல் வெளியான நூல். இதிலுள்ள கடைசி மூன்று அத்தியாயங்கள்  பெரியார் ஈ.வெ.ரா, திராவிடக் கழகம், பிரிவினையும் ஐக்கியமும் முக்கியமானவை. வாசித்துப் பாருங்கள். ஜூல 1, 1947 நாளைத் திராவிடப் பிரிவினை நாளாகப் பெரியாரின் கட்டளைப்படி கொண்டாடியதை நூலின் மூலம் அறிய முடிகின்றது.

பெரியார் சிறு வயதிலிருந்தே தீண்டாமையை வெறுத்தார்.  கேரளத்தில் வைக்கம் ஊரில் தீண்டாமைக்கெதிராக நடந்த சத்தியாக்கிரகத்தில் மனைவி நாகம்மையுடன் தலைமை தாங்கி வழி நடத்தியிருக்கின்றார்.

அப்பொழுது காங்கிரசில் இருந்த பெரியார், காங்கிரசில் நிலவிய ஆரிய ஆதிக்கத்தின் காரணமாக விலகி சுய மரியாதை இயக்கத்தை ஆரம்பித்துக் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்கின்றார். அப்பொழுது குடியரசு பத்திரிகையை ஆரம்பித்து மக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டுகின்றார்.

எகிப்தும், கிரீஸ், துருக்கி,  ரஷ்யா, ஜேர்மனி , இங்கிலாந்து , ஸ்பெயின் , பிரெஞ்சு, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றார்.  அங்குள்ள அரசியல் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றார்.

Monday, February 10, 2025

பெரியாரும் , தமிழ்த் தேசியமும், தமிழும் & திராவிடமும்


தமிழ்த் தேசியம் பற்றி 1938இலேயே பேசி விட்டார். அதற்காகப் போராடினார். இது  வரலாறு. பெரியார் தமிழர் தலைவர் என்பதில் சந்தேகம் இருப்பவர்கள் 1938, 1939 காலகட்டத்தில் பெரியார் எழுதியவற்றை உள்ளடக்கியுள்ள இங்குள்ள பக்கங்களைப் பாருங்கள்.  இவற்றைப் படிக்காமல் திராவிடம் பற்றியும், தமிழ் பற்றியும் கூக்குரல் இடாதீர்கள்.  

https://www.facebook.com/VNGiritharan/posts/pfbid02iu78rotyGHuAtBxzk5sEXfY1t74r2GP1CN9sHHMJk8MvsdaYuSPDuozDCMxqyYSWl


 

 

 

 

Sunday, February 9, 2025

தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழியா?


மானுட இனதத்தின் வளர்ச்சிப் போக்கில்

பல படி நிலைகள்.
குரங்கிலிருந்து வந்தவர் மனிதர் என்ப்ர்.
புதுமைப்பித்தனோ முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு
என்றாலே மகிழ்வர் எம்மவர் என்பார்.

குரங்கிலிருந்து வந்தவர்,
குகைகளில் வாழ்ந்தார்.
குழுக்களாக வாழ்ந்தார்.
பெண் வழிக்குடும்பத்தைக் கண்டார்.
பொதுவுடமை பேணினார்.
தனியுடமை கண்டார்.
தனித்து வாழத்தொடங்கினார்.
வர்க்கங்களாகப் பிரிந்தார்.
வர்ணங்களாகப் பிரிந்தார்.
மதம், மொழியெனப் பிரிந்தார்.
'யாரும் ஊரே! யாவரும் கேளிர்!" என்றான்
நம் கவிஞன். கேட்டாரா?

குரங்கிலிருந்து வந்தவர்
காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்.

நம்மவரோ
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
யார் வாழ்ந்தார்? வாழ்வார்?
யார் இருந்தார்? யார் இருப்பார்?

த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!

'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான  த.பி...

பிரபலமான பதிவுகள்