Wednesday, July 17, 2024

பாடல் - குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -

 

      - இசை & குரல் - AI SUNO  -

[என் குருமண்காட்டு நினைவுகள் என்னும் நெடுங் கவிதை சிறு மாறுதல்களுடன் இப்பாடலாக உருவெடுத்துள்ளது.  வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். ரப், பொப், ரொக் என்று உருவான இசைக் கலவை இது. அதற்காக AI SUNO வுக்கு நன்றி ]

'YouTube' Link - https://www.youtube.com/watch?v=Iuy2svIdTp8&feature=youtu.be

பாடல்; குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -

பால்யப் பருவத்துக் குருமண் காடே!
நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோயவே முடியும்.
நனவிடை தோயவே முடியும்.

என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.

வனம், வாவி நிறைந்த குருமண்காடு.
வளமான பூமி என் குருமண்காடு.
காடு  இன்று அங்கில்லை.
அந்த வனப்பு அங்கில்லை.
அந்த வளம் அங்கில்லை.
என்று நான் காண்பேன்?
எங்கு நான் காண்பேன்?
என் நினைவுகளில் நிற்கும்
இன்னுலகம் என் குருமண்காடு.

நள்ளிரவுகளில் நரிகள் ஊளையிடும்.
படுக்கையில் முடங்கிக் கிடப்போம்
நிலாக் காலம் என்றால்
நரிகளுக்குக் கொண்டாட்டம் தானே.
இரா அமைதி ஊடறுக்கும்
ஊளையில் ஒடுங்கிக் கிடப்போம்!

நோக்கிய திசையெங்கும் விருட்சங்கள்!
முதிரை! பாலை! வீரை! கருங்காலி!
மேலும் மேலும் விருட்சங்கள்!
விருட்சங்களில் தாவித் திரியும்
வானரங்கள் எப்போதும் எங்கும்.
வனப்பு மிகு செங்குரங்கு!
வலிமை மிகு தாட்டான்
தாட்டான்கள் எமைத் துரத்தும்.
தப்ப ஓடிச் செல்வோம்.

எத்தனை வகைப் புட்கள்.
எத்தனை வகைப் புட்கள்.
எங்கு நோக்கினும் புட்கள்.
காடை, கெளதாரி , காட்டுக்கோழி
ஊருலாத்தி, பருந்து,  ஆட்காட்டி,
இரட்டை வாற் குருவி,
மைனா, மாம்பழத்தி, குக்குறுபான்,
தேன் சிட்டு, சிட்டுக்குருவி.. ஆகா!
எத்தனை வகைப் புட்கள்.
எத்தனை வகைப் புட்கள்.

வான் பாயும் பட்டாணிச்சுப் புளியங்குளம்.
விடிகாலையே எழுவோம். செல்வோம்.
விரால் பிடிக்கும் வெங்கணாந்திகள்.
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோய்கின்றேன்.

நீந்தப் பழகினேன் அங்குதான்.
நீரரவங்களும் போட்டி போடும்.
தாமரைக்கொடி நீக்கி,
தளராமல் நீந்தினோம்.

பல்லின மனிதர் வாழ்ந்த மண்
அமைதியில் ஆழ்ந்த மண்.
அக்காலம்
அக்காடு! குருமண்காடு!
அழகான காடு.
அற்புதமான காடு!
ஆ! அந்தக் காடு இன்றில்லை!
ஆ! அந்தக் காடு இன்றில்லை!
ஆ! அந்த வனப்பு இன்றில்லை!
ஆ! அந்த வளமும் இன்றில்லை!

இல்லாத காட்டை எண்ணி
இன்று நனவிடை தோய்கின்றேன்!
என் நினைவில் இருக்கும்
இல்லாத காட்டைப் பற்றி
இன்று நனவிடை தோய்கின்றேன்!
எத்தனை வகைப் புட்கள்.
எத்தனை வகைப் புட்கள்.



No comments:

தொடர் நாவல்: மனக்கண் (6) - டாக்டர் சுரேஷ்! - அ.ந.கந்தசாமி -

6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்  ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீர...

பிரபலமான பதிவுகள்