Wednesday, July 24, 2024

கவிதை; காலவெளிச்சித்தனின் மடலொன்று! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=_IO-N784Mf0


கவிதை; காலவெளிச்சித்தனின் மடலொன்று!  - வ.ந.கிரிதரன் -
 
ஒளிக்கூம்புக்குள்
விரிந்து ,
சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.

அடியே! அண்டத்தில்
நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.

ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.நானே  கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால்
இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.

இருந்தாலும் கவலையை விடு.
இன்னும் சிறிது விளக்குவேன்.
நீ, நான் , இங்குள்ள அனைத்துமே
துகள்களின் நாட்டியம்தாம்.
சக்தியின் வடிவம்தான்.
புரிந்ததா சகியே!

இன்னுமொன்று இயம்புவேன் கேள்.
இங்கிருந்து எத்தொலைவும்
ஏன் இட-வெளி மீறிப்
பயணிக்கும் காலவெளிச்சித்தன் நான்.

முடியுமா? சாத்தியமா? என்று நீ
கேட்கலாம். இல்லை கேட்பதென் காதுகளில்
விழுகின்றது.

'அறிவுணர்வு' வாகனமென்னிடமுள்ளதே.
ஏன் உன்னிடமுமுள்ளதே.
ஏன் அவர்கள் எல்லாரிடமும் உள்ளதே.
அதன் மூலம். ஆம்! அதன் மூலம்
என்னால் இட-வெளியை மட்டுமல்ல
அதற்கப்பாலும் பயணிக்க முடியும்.

அதனால்தான் கூறினேன் 'உன்னால்
எங்கு சென்றிடும்
என்னாலும் அங்கு வரமுடியுமென்று;.
நீ எஙகே! அடி கண்ணம்மா
நானும் அங்கே!

என் வெளியில் நானிருக்கின்றேன்.
என் வெளியில் நீயும் இருக்கின்றாய்.
உன் வெளியில் நீ  இருக்கின்றாய்.
உன் வெளியில் நானும் இருக்கின்றேன்.
என் வெளியில் அவர்களும் இருக்கின்றார்கள்.
அவர்கள் வெளிகளில் நாமும் இருக்கின்றோம்.

நீயிருப்பதும், அவர்கள் இருப்பதும்
என் வெளியில் என்றால்
எப்படி நீயும் அவர்களும்
சுயாதீனமாக இருக்க முடியும்

என்னை  மீறி.
உன் நிலையும் அதுதானே.
உன்னை மீறி
அவர்களை மீறி,
நானெப்படி இங்கிருக்க முடியும்?

கண்ணம்மா புரிந்ததா? விடை தெரிந்ததா?

என்னை மீறி நீயில்லை.
இவ்வுலகில்லை.
இங்கு எதுவுமேயில்லை.
அதனால் பிரிவுமில்லை.
பிரிவற்ற உறவினில்
அறிவு மிகுந்து பிரகாசிக்கின்றேன்.
'அறிவுணர்'வால் சுடர்விடுகின்றேன்.
கண்ணம்மா!  'அறிவுணர்'வால் சுடர்விடுகின்றேன்.


No comments:

தொடர் நாவல்: மனக்கண் (6) - டாக்டர் சுரேஷ்! - அ.ந.கந்தசாமி -

6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்  ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீர...

பிரபலமான பதிவுகள்