Wednesday, July 10, 2024

கவிதை: எழுக அதிமானுடா! - வ.ந.கிரிதரன் -


'எழுக அதிமானுடா!' என்னும் இக்கவிதையை எண்பதுகளில் என் குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். தாயகம் (கனடா) பத்திரிகையில் முதன் முதலில் பிரசுரமானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் பிரசுரமானது. எனது 'எழுக அதிமானுடா' , 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்புகளிலும் வெளியானது. எண்பதுகளில் எழுதிய கவிதையின் வரிகளை அக்காலத் தோற்றத்தில் வாசித்தால் எப்படியிருக்கும்? இப்படியிருக்கும்.

எழுக அதிமானுடா!

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட்' சுவர்கள்!
கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில்
மயங்கிக் கிடக்கும்
இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.

இடையில் சுழன்று வீசும் வாயுத்தேவன்.
செயற்கையின் தாக்கங்கள் செறிந்திட்ட
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.

பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகள்,
கனவுகளில், நீலப்படுதாவின் கீழ்
நிலமடந்தை குளிர்ந்து கிடப்பாள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியரின்
இளநகைகள்.

மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.

இயற்கையின் தாக்கத்தினுள்
இலங்கிட்ட  வட்டங்களில்
மயங்கிக் கிடந்த வாழ்க்கைச்
சக்கரங்கள்.  

இனிய
அதிகாலைப் பொழுதுகள் அவை.
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா ?

விஞ்ஞானத்தின் இறுமாப்பில்
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக்கிடக்கும் மானுடத்தின்
நெஞ்சினிலோ.......

ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.

அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?

விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்! போர்! போர்!

ஆ....

வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?

ஆ..அந்த

அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!
அதி மானுடரே!

எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?

No comments:

தொடர் நாவல்: மனக்கண் (6) - டாக்டர் சுரேஷ்! - அ.ந.கந்தசாமி -

6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்  ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீர...

பிரபலமான பதிவுகள்