Monday, May 27, 2024

சுதந்திரன்: 'கண்டி இராச்சியத்தில் அரசோச்சியது தமிழ். பெளத்தத்தோடு இந்து மதத்துக்கும் சிறப்பான இடம் இருந்தது'


12.6.1960 சுதந்திரனில் தமிழின்பம் என்னும் புனைபெயரில் ஒருவர் 'கண்டி இராச்சியத்தில் அரசோச்சியது தமிழ்.  பெளத்தத்தோடு இந்து  மதத்துக்கும் சிறப்பான இடம் இருந்தது' என்னும் கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார்.

அதில் நாயக்க மன்னர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பையும் குறிப்பிட்டிருக்கின்றார்.

உதாரணத்துக்கு அக்கட்டுரையிலிருந்து கீழ்வரும் பகுதிகளைப் பகிர்ந்துகொள்கின்றேன். வாசித்துப் பாருங்கள்:

"இந்த நாயக்க மன்னர்கள் தமிழ் மொழிக்குப் பெரும் சேவை செய்துள்ளனர். ஆந்திர, சமஸ்கிருதப் பண்ண்டிதர்களுடன் தமிழ் வித்துவான்களும் சரிசமமான இடம் பெற்றிருந்தார்கள். இவர்களது தமிழ் சேவையிலான வேலைகளை இன்றும் தஞ்சையிலுள்ள சரஸ்வதி மகாலிலும், மதுரை திருமலை நாயக்கர் மகாலிலும் காணலாம். "

Sunday, May 26, 2024

காலத்தால் அழியாத கானம்: 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்'


'நல்லவன் வாழ்வான்' திரைப்படத்தின் மூலக்கதை நா.பாண்டுரங்கனுடையது. திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் அறிஞர் அண்ணா. டி.ஆர்.பாப்பாவின் இசையில் ஒலிக்கும் இப்பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் வாலி. இதுதான் அவர் எம்ஜிஆரின் படத்துக்கு எழுதிய முதலாவது பாடலென்று அறிகின்றேன்.
 
கவிஞர் வாலி எம்ஜிஆருக்குப் பொருத்தமாக வரிகளை எழுதுவதில் வல்லவர். அதனால் எம்ஜிஆர் இதயத்தில் நல்லவராக இடம் பிடித்தவர். இப்பாடலில் வரும் பின்வரும் வரிகள் எவ்வளவு அழகாகக் காதல் வரிகளுக்குள் கட்சிப் பிரச்சாரத்தைச் செய்கின்றன;
 
"அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
உள்ளத்தாமரை மலராதோ ?
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ ?"

Saturday, May 25, 2024

எழுத்தாளர் நந்தினி சேவியர் நினைவாக..


முகநூல் என்னைத் தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமைகளுடன் பிணைத்து வைத்தது. அவர்களில் ஒருவர் எழுத்தாளர் அமரர் நந்தினி சேவியர். மறக்க முடியாத இலக்கிய ஆளுமை.
 
என் முகநூல் பதிவுகளுக்கு அவர் இட்ட எதிர்வினைகளை, மெசஞ்சர் மூலம் பரிமாறிக்கொண்ட உரையாடல்களை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். அவர் இருந்திருந்தால் இன்று அவருக்கு வயது 75.
எனக்கு மிகவும் பிடித்த அவரது பண்பு: தான் ஏற்றுக்கொண்ட மார்க்சியக் கோட்பாடுகளூடு , சமூக, வர்க்க, அரசியல் விடுதலையினை நாடிய அவர் இறுதிவரை அவ்வழியே தளும்பாமல் வாழ்ந்து வந்தவர். அதில் அவர் மிகவும் தெளிவாகவிருந்தார்.

Friday, May 24, 2024

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கிய மன்றம்!


மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கம் தற்போது 'மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கிய மன்றம்' என்றழைக்கப்படுகின்றது.
இத்தமிழ் மன்றத்தின் இணைய இணைப்பு - https://tlauom.com
இத்தளத்தில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான நுட்பம், தமிழருவி இதழ்களின் கடந்த கால இதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

(மீள்பிரசுரம்) மோகத்தின் நிழல் - சுகுமாரன் -


'அம்மா வந்தாள்'  ஒன்றைத் தவிர தி. ஜானகிராமன் எழுதிய பிற நாவல்கள் எல்லாமும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவை. 'ஆனந்த விகடன்' போன்ற வெகுஜன இதழ்களிலும் 'கணையாழி' போன்ற சிறு பத்திரிகை களிலுமே அவை தொடராக வெளியாகியிருக்கின்றன. பிற்காலத்தில் வெகு ஜனப் பிரபலமுள்ள எழுத்தாளர்கள் உருவாக்கிய தொடர் கதை இலக்கணம் எதற்கும் தி.ஜாவின் நாவல்கள் உட்படாதவை. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசக எதிர்பார்ப்புக்காக ஏற்படுத்திய திடீர் திருப்பங்களோ சுவாரசியச் சிக்கல்களோ இல்லாமல் எழுதப்பட்டவை.  எனவே தான் இந்த நாவல்களைத் தொடர்கதைகள் என்று சொல்லாமல், தொடர்கள் என்று குறிப்பிடுகிறேன்.

Saturday, May 18, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (6) - அத்தியாயம் ஆறு: எதிர்காலத்திட்டங்கள் பற்றிய உரையாடலொன்று.



ஒரு சில  மாதங்கள் ஓடி  மறைந்தன. இதற்கிடையில் பானுமதியும் மாதவனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டிருந்தனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அருகிலிருந்த  பூங்காவுக்குச் சென்று உரையாடுவதும், குரோசரி ஷொப்பிங் செய்வதற்காக இரு வாரத்துக்கொருமுறை செல்வதும், நூலகங்கள்செல்வதும்,  அவரவர் இருப்பிடங்களில் சந்தித்துக்கொள்வதும், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடுவதுமெனப் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன.  இவ்விதமானதொரு நாளில் அன்று அவள் அவனது அப்பார்ட்மென்ட்டிற்கு வேலை முடிந்ததும் வந்திருந்தாள். சிறிது களைப்பாகவிருந்தாள்.

"ஏன்ன பானுமதி, களைப்பாகவிருக்கிறீர்கள்? ' என்றான் மாதவன்.

"இன்று நாள் முழுவதும் ஒரே பிஸி. மீட்டிங், செர்வர் அப் கிரேடிங்  என்று சரியான வேலை.  அதுதான். வேறொன்றுமில்லை. " என்றாள் பானுமதி பதிலுக்கு. அத்துடன் அவள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவனை நோக்கிக் கேட்டாள்: "இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. மாது, உனக்கு லினக்ஸ் செர்வர் பற்றி நல்லாத்தெரியும்தானே. "

Friday, May 17, 2024

முள்ளிவாய்க்கால் கஞ்சி!


இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிவைத் தந்த யுத்தம் முடிவுக்கு வந்த தினம் மே 18. யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் இதுவரை இந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆறவில்லை. யுத்தத்துக்குப் பிரதான காரனமாக அமைந்த இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டவில்லை.  யுத்தக்குற்றங்களுக்குக் காரணமானவர்களின் மீதான சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணாமல்போனவர்களுக்கான நீதி இன்னும் கிட்டவில்லை.  இன்றும் மக்களின் காணிகள் முற்றாக விடுபடாத நிலைதான் காணப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கு மிகவும் அடிப்படை.

அண்மையில் தமிழ்த் தேடியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'போர் முடிவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் போருக்கு வழிசமைத்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் பிறக்கவில்லை. தாம் இன்னும் வலியுடனேயே வாழ்கின்றனர் என்ற தகவலையும், தமக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற செய்தியையுமே இந்த கஞ்சி சிரட்டை ஊடாக தமிழ் மக்கள் வழங்குகின்றனர்.' என்று கூறியிருந்தார். உண்மைதான். இலங்கையில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுமானால் நிரந்தர அரசியல் தீர்வும், நல்லிணக்கச் செயற்பாடுகளும் அவசியம்.

Wednesday, May 15, 2024

"சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்" - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா


'சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார். சொந்தப் புத்தியை கொண்டே சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்.' என்று பாடுபவர் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா.
 
 
ஓரு படைப்பைப்பற்றி ஒருவருக்குப் பல்வேறு காரணங்களுக்காக விமர்சனங்கள் இருக்கும், பெரியாரின் அன்றைய காலகட்டடத்தில் அவர் சமூக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, ஆரியரின் ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். போராடியவர். அவருக்குத் தமிழ்க் காப்பியங்கள் மீது ஆரியரின் தாக்கம் அவற்றில் இருக்கும் காரணத்துகாக எதிர்ப்பு இருந்தால் அவற்றை அவர் தர்க்கரீதியாக எடுத்துரைத்திருந்தால் அவை அவரது கருத்துரிமை. அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். உணர்ச்சியின் அடிப்படையில் குரல் எழுப்புவதால் அர்த்தமில்லை. கம்பரைப்பற்றி, தொல்காப்பியரைப் பற்றியெல்லாம் அவருக்கு விமர்சனங்கள் இருந்தால் அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அண்ணா கம்பரசம் எழுதியவர். அக்காலகட்டப் பின்னணியில் வைத்து அவர்கள் அன்று தெரிவித்த கருத்துகள் ஆராயப்பட வேண்டும்.

வாழ்த்துகள்: வாசுகி கணேசானந்தனின் (V. V. Ganeshananthan) Brotherless Night (சகோதரனற்ற இரவு) நாவலுக்கு 2023ற்குரிய புனைவுக்கான Carol Shields Prize இலக்கிய விருது $150,000


வாசுகி கணேசானந்தனின் (ஆங்கில இலக்கிய உலகில் V. V. Ganeshananthan என்றறியப்பட்டவர்)  Brotherless Night (சகோதரனற்ற இரவு)  நாவலுக்குப் புனைவுக்கான , 2023ஆம் ஆண்டுக்குரிய,   $150,000 (US) மதிப்புள்ள  Carol Shields Prize என்னும்  இலக்கிய விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகள்.  

இவர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்.   ஏற்கனவே  Love Marriage  என்னும் நாவலையும் எழுதியுள்ளார். இரு நாவல்களுமே இலங்கையில் நிலவிய போர்ச்சூழலை மையமாகக் கொண்டவை.  இதுவரை நான் வாசிக்கவில்லை. இணையத்தில் இவை பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் அடிப்படையில் இவ்விதம் கூறுகின்றேன்.

Monday, May 13, 2024

புகலிட இலக்கியமும் - வ.ந.கிரிதரனின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்களும் - ஈழக்கவி -


- எழுத்தாளரும், திறனாய்வாளருமான ஈழக்கவி  ஜீவநதி பதிப்பகம் வெளியிட்ட எனது சிறுகதைத்தொகுதியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' பற்றி நல்லதொரு திறனாய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். பதிவுகள் இணைய இதழில் வெளியான அக்கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கி -


‘டயஸ்போர’ (Diaspora) என்பது ஒரு பயங்கரவாத/ தீவிரவாத அமைப்பு என்ற மாயை பெரும்பான்மை மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்து அரசியல் நிலவரங்களும் இனவாத ஊடகங்களும் இந்த பிம்பத்தை உருவாக்கியுள்ளன. அண்மையில் சியத டிவி (Siyatha TV) இன் ‘டெலிவகிய’ (Telewakiya) நிகழ்ச்சியில் ஊடகவிலாளர் லால் மாவலகே (Lal Mawalage) இந்த மாயத்தை அல்லது பிம்பத்தை சுட்டிக் காட்டி, ‘டயஸ்போர’ என்பது புலம்பெயர் மக்களை குறிக்கின்ற ஒரு சொற்றொடர் என்றும் குறிப்பாக, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சர்வதேசமெங்கும் வாழும் தமிழ் மக்களையும் சுட்டுகின்றது - போன்ற கருத்துக்களை நேர்மையாகவும் வரலாற்று ரீதியான கருத்தியல்களோடும் உலகலாவிய விவரணங்க ளோடும் மிகத்தெளிவாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. புலம் பெயர்ந்தவர்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான டயஸ்போரா என்பது யூதர்களில் புலம் பெயர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. யூதர்கள்தான் பல காலமாகவே உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின் இஸ்லாமியர் வாழ்ந்த நாடுகளிலிருந்து சில பகுதிகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்களுக்கென ஒரு நாடு ஏற்படுத்தப்பட்டது, இதுவே உலகத்திற்கு சாபக்கேடாகிவிட்டது. உலகில் பல சமூகங்கள் புலம் பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சான்றாக ஆப்பிரிக்க மக்கள் பலநாடுகளுக்குப் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. உலகில் அதிகமாகப் புலம்பெயர்ந்தது ஈழத்தமிழர்கள்தான். அரசியல் அடாவடித்தனம் காரணமாக சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு உருவானது. குடிபெயர் தலைக்குறிக்க மைக்ரேஷன் (Migation) டிஸ்ப்ளேஸ்மெண்ட் (Displacement) என்னும் இரு சொற்களும் ஆளப்படுகின்றன. மைக்ரேசன் என்பது ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குப் பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்த லாகக் காணக்கூடாது என்பது பன்னாட்டு வரையறை ஆகும்.

Saturday, May 11, 2024

காலத்தால் அழியாத கானம் - எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா?


மானுடரின் முதற் காதல் அனுபவமென்பது வளர்ச்சியின் ஒரு படிக்கட்டு.  பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. காரணம் முதிர்ச்சியடையாத மானுடப் பருவத்தில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மையமாக வைத்து உருவாகும் அனுபவம் அது. ஆனால் அதுவே அதன் சிறப்பம்சமும் கூட. அவ்வனுபவத்தில் உள்ளங்கள் உணர்வை மட்டுமே மையமாக வைத்துச் செயற்படுகின்றன.அதற்குப் பின் வளர்கையில் இலாப, நட்டங்களைச் சீர் தூக்கிப் பார்க்கும் பக்குவத்துக்கு அவை மாறி விடுகின்றன. இதுவே பெரும்பாலும் முதற் காதல் நிறைவேறாமல் போவதற்கு முக்கிய காரணம்.

காலத்தால் அழியாத கானம் - 'பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்'


சங்ககாலப்பாடலான 'குறுந்தொகை'யில் பதுமனார் என்னும் புலவர் ஒருவரின் பாடலொன்று பெண்ணொருத்தியின் காதல் உணர்வுகளை அழகாகப் படம் பிடிக்கும். ஓசைகள் யாவுமடங்கி ஊரே உறங்கும் நள்ளிரவில் அவள் மட்டும் உறங்காமல் விழித்திருக்கின்றாள். இதனை அழகாகப்படம் பிடிக்கும் குறுந்தொகைப்பாடல்:

"நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே"


நள் என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்களை உரையாசிரியர்கள் வழங்கியிருக்கின்றார்கள். செறிவு, ஒலி, நடு என அர்த்தங்கள் பல. இங்கு நள் என்றது செறிவு மிக்க யாமம் என்பதற்கும் பொருந்தும், இரவின் நடுப்பகுதி என்பதற்கும் பொருந்தும்.  இங்கு தலைவனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளான தலைவி, உலகத்து மாந்தரெல்லாரும் தூங்குகையில், தலைவியின் தோழியுட்பட,  தூக்கமின்றித் தவிக்கின்றாள். அவள் தோழியை எழுப்பித் தன் நிலையை எடுத்துரைக்கின்றாள்.  'உலகமும் துஞ்சுகையில் தான் மட்டும் துஞ்சாமல் இருக்கின்றேன்' என்கின்றாள்.

Tuesday, May 7, 2024

கனவுக் காளை மோகன்!


'மைக்' மோகன் என்று இவரை அழைப்பார்கள். ஒரு காலத்தில்  யுவதிகளின் கனவுக் காளையாக விளங்கியவர்  மோகன். இதற்கு முன்னர் இவ்விதம் கருதப்பட்ட நடிகர் ஜெய்சங்கர். இவரது வெற்றி ரஜனி, கமல் போன்றவர்களின் பட வெற்றிகளை ஓரங்கட்டும் வகையில் அமைந்திருந்தன. இவர் படங்கள் வெளியாகும் நாட்களில் அவர்கள் தம் வெளியீடுகளைத்  தவிர்க்கும் அளவுக்கு இவரது வெற்றி அமைந்திருந்தது.  ஒரு சாயலில் கமலைப்போலிருக்கும் இவரது தோற்றத்தில் கமலிடம் இல்லாத அப்பாவித்தனம் கலந்த அழகு மிளிர்ந்திருக்கும்.

இவ்விதம் வெற்றிப்பட நாயகான விளங்கிய இவர் தமிழ்த்திரையுலகிலிருந்து காணாமல் போனது ஒரு துரதிருஷ்ட்டமே. இதற்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:

சந்தியாப்பிள்ளை மாஸ்டர் என்னும் இளைஞர்!

 

சந்தியாப்பிள்ளை மாஸ்டரைப்பற்றி நினைத்தால் எனக்கு முதலில் தோன்றுவது அவரது திடகாத்திரமான உடம்பும், மீசையும், சிரித்த முகமும்தாம்.  அவருடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தால் சில கேள்விகள் கேட்கவேண்டுமென்று நினைப்பதுண்டு.அதற்குக் காரணம் அவரது வயதும், தோற்றமும்தாம். எண்பத்தைந்து வயது, ஆனால் தோற்றமோ நாற்பதுகளின் நடுப்பகுதிதான். எப்படி இவரால் இவ்விதமிருக்க, தோன்ற முடிகின்றது என்று வியப்பதுண்டு. அதனால்தான் அவரைச் சந்திக்கையில்  அவ்விதம் சில கேள்விகள் கேட்கவேண்டுமென்று நினைப்பதுண்டு.

இன்று அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது இளமையின் இரகசியம் பற்றிச் சில கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில்கள் பலருக்கும் உதவக்கூடும் என்பதால் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

Thursday, May 2, 2024

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!


எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது' எனக் கூறியிருந்தார்.
 
இதற்கான என் இதுவாக இருக்கும்: 
 
எழுத்து மீதான அணுகுமுறை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது. உங்கள் எழுத்து பற்றிய கருதுகோளின்படி உங்களுக்கு யார் எல்லாரும் தரமான எழுத்தாளர்களாகத் தெரிகின்றார்களோ அவர்களைக் கொண்டாடுங்கள். 

Tuesday, April 30, 2024

'மணிக்கொடி' தந்த ஜோதிர்லதா கிரிஜா!


கடந்த 18.04-2024 அன்று மறைந்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவின் முக்கியமான நாவல் 'மணிக்கொடி'.  இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து கல்கியின்  'அலை ஓசை' , ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' ஆகியவை ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவ்வரிசையில் வெளியான இன்னுமொரு நாவல்தான் ஜோதிர்லதா கிரிஜாவின் 'மணிக்கொடி'.  

Sunday, April 28, 2024

காலத்தால் அழியாத கானம்: 'ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்..'


எஸ்.எஸ்.ஆர் & விஜயகுமாரி, கே.வி.மகாதேவன், கவிஞர் கண்ணதாசன் கூட்டணியிலுருவான இன்னுமொரு காலத்தால் அழியாத கானமிது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் 'சாரதா' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.

காதலின் சிறப்பை, இயல்பை அற்புதமாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர். காதலின் பல்வேறு கூறுகளையும் (உறவு, உணர்வு, பிரிவு, நினைவு என) எழுத்தில் வடிப்பதென்றால் கவிஞருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

https://www.youtube.com/watch?v=3bzUv0io7mE&list=RD3bzUv0io7mE&start_radio=1

Friday, April 26, 2024

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...


அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான சுதா குமாரசாமியைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது 1988இல் வெளியான அவரது கவிதைத்தொகுப்பான 'முடிவில் ஓர் ஆரம்பம்' பற்றிக்குறிப்பிட்டார். 
 
அவ்விதம் குறிப்பிடுகையில் 'கனடாவில் வெளியான முதலாவது கவிதைத்தொகுப்பாக இருக்குமென்று தான் நினைப்பதாக' அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
கனடாவில் வெளியான முதலாவது கவிதைத்தொகுப்பாக அது இருக்கக் கூடும். சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' தொகுப்பிலுள்ள கவிதைகளின் எண்ணிக்கை 15.  கவிதைகளை உள்ளடக்கி வெளியான முதலாவது தொகுப்பென்றால் அது ஜனவரி 4, 1987இல் வெளியான எனது தொகுப்பான 'மண்ணின் குரல்' நூலே. அது கட்டுரைகள், சிறு நாவலான மண்ணின் குரல் மற்றும் கவிதைகள் உள்ளடக்கி வெளியான தொகுப்பு. அது எனது எட்டுக் கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளது. அவை:

Thursday, April 25, 2024

ஜெயகாந்தன் நினைவாக.......

- எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளமைத்தோற்றம். -

எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம் ஏப்ரில் 24.

எழுத்தாளர் ஜெயகாந்தன்  என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை.    வெகுசனப் படைப்புகளில் மூழ்கிக்கிடந்த பருவத்தில் வெகுசன ஊடகங்களினூடு, வித்தியாசமானவராக அறிமுகமாகி என்னைக் கவர்ந்தவர் ஜெயகாந்தன். இவர் பெயரை நான் முதன் முதலில் கேட்டது என் பெற்றோரின் உரையாடலொன்றின்போதுதான். அவர்கள் ஆனந்தவிகடனில் வெளியான இவரது 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'கோகிலா என்ன செய்து விட்டாள்' போன்ற முத்திரைக்கதைகளாக வெளியான குறுநாவல்களைப்பற்றி உரையாடியபோதுதான் முதன் முதலில் இவரது பெயரை நான் அறிந்துகொண்டேன்.

ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' குறுநாவல்  கல்கியில் வெளியானது. இதுவே பின்னர் 'காவல் தெய்வ'மாகத் திரைக்கு வந்தது. அதே பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும் வெளியானது. எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'தினமணிக்கதிர்' ஜெயகாந்தனின் 'ஒரு பிடி சோறு' சிறுகதைத்தொகுப்பிலிருந்த சிறுகதைகள் பலவற்றை மீள்பிரசுரம் செய்தது.   இவரது புகழ்பெற்ற 'டிரெடில்', 'பிணக்கு', 'ஒரு பிடி சோறு', 'ராசா வந்துட்டாரு' போன்ற சிறுகதைகளை அப்போதுதான் வாசித்தேன்.

ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்'


ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்' (The Old Man and The Sea) உலக இலக்கியத்தில் முக்கியமான நாவல். இது ஒரு விரிந்து பரந்த நாவலல்ல. சிறியதொரு நாவல். இந்நாவல் ஹெமிங்வேயிற்கு புலியட்சர் பரிசைப் பெற்றுத்தந்தது. நோபல் பரிசினையும் பெற்றுத்தந்தது. ரொபின்சன் குரூசோ, மோபி டிக் போன்று கடலுடன் சம்பந்தப்பட்ட நாவல் மட்டுமல்ல , அவற்றைபோல் மானுட இருப்பின் குறியீடாக விளங்குமொரு நாவல்.

இந்நாவலில் வரும் சண்டியாகோக் கிழவன் மறக்க முடியாத பாத்திரம். இந்நாவல் முதுமையைப்பற்றிப் பேசுகிறது. நட்பைப் பற்றிப் பேசுகிறது. பாசத்தைப் பற்றிப் பேசுகிறது. சக உயிர்களைப்பற்றிப் பேசுகிறது.  உயிர்களின் விடா முயற்சி பற்றிப் பேசுகிறது. இயற்கையைப்பற்றிப் பேசுகிறது. மானுட இருப்பு பற்றிப் பேசுகிறது.

ஹெமிங்வேயின் நடை சிறப்பு மிக்கது.ம் தனித்துவமானது. வாசகர்களைக் கட்டிப்போட்டு விடுவது.

ஒரு நாவலின் வெற்றிக்கு அதன் பக்கங்களின் எண்ணிக்கை காரணமல்ல என்பதை வெளிப்படுத்தும் சிறுநாவல் 'கிழவனும்,கடலும்).

Wednesday, April 24, 2024

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்!


மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட்டுப்பகுதி ஒற்றையடிப்பாதையுடன் கூடியதொரு பகுதி. சில வீடுகள் , நெசவு சாலை, பண்ணையுடன் கூடிய இயற்கை வளம் மலிந்த பகுதி. அப்பகுதியில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. படுக்கையில் படுத்திருந்தபடி வான் பாயும் ஒலி கேட்டுக்கொண்டிருப்பேன். விடிந்ததும் ஊரவர்கள் வான் பாயும் குளத்தைப் பார்க்கச் சென்று விடுவார்கள். நானும் சென்று பார்ப்பேன். வான் பாயுமிடத்தில் இரவெல்லாம் வெங்கணாந்திப்பாம்புகள் காத்திருந்து அவ்வழியால் சென்று விடும் விரால் மீன்களைப் பிடிக்குமாம் என்பார்கள். ஊரவர்கள் சிலரும் விரால்களைப் பிடிப்பார்கள்.

என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த குளம் பட்டாணிச்சுப்புளியங்குளம். இக்குளம் நிறைந்து வான் பாயும் காட்சியும் அத்தகையதே.

தொடர் நாவல்: மனக்கண் (5) - சலனம் - அ.ந.கந்தசாமி -


ஐந்தாம் அத்தியாயம்: சலனம்



பார்க்கப் போனால் மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? பத்மாவின் வாழ்க்கையிலே, பஸ் தரிப்பில் அவள் கொட்டாஞ்சேனை பஸ்ஸிற்காகக் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்துவிட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வீதியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு சம்பவம், சில போது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பிவிட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும்போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியதோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிடவில்லையா? ஆள்வோனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது!

சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் -- ஆனால் அதன் பலனோ மிக பெரியது. பஸ் தரிப்பில் எல்லோரையும் போல், பஸ்சுக்காகக் காத்துக்கிடக்கும் சலிப்பைப் போக்குவதற்காகப் பத்மாவும் தங்கமணியும் ஆரம்பித்த உரையாடல் இவ்வாறு தனது உள்ளத்தையே பிழிந்தெடுத்து வெம்ப வைக்கும் ஒரு பெரும் அதிர்ச்சி சம்பவமாக முடிவுறும் என்று பத்மாவால் எண்ணியிருக்க முடியுமா? தங்கமணி ஸ்ரீதரின் சமூக அந்தஸ்தைப் பற்றிக் கூறிய தகவல்கள், அதைத் தொடர்ந்து அங்கே வந்த ஸ்ரீதரின் கார் டிரைவர் கூறிய விவரம் - எல்லாம் சேர்ந்து பத்மாவின் உள்ளத்தை ஒரே கலக்காகக் கலக்கிவிட்டன.

பஸ்ஸில் ஏறி வசதியாக ஒரு ஜன்னலண்டை உட்கார்ந்து நண்பகலின் சூரிய வெளிச்சத்தில் வெண் புறாவின் ஒளி வீசும் சிறகுகளைப் போன்ற பளபளப்போடு வானத்தில் ஓடிக்கொண்டிருந்த முகில்களைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவின் உள்ளத்தில் “ஸ்ரீதர் ஏன் இப்படிப்பட்ட பொய்யை எனக்குச் சொல்ல வேண்டும்? ஏன் என்னை இவ்வாறு ஏமாற்ற வேண்டும்?  இதில் ஏதோ பெரிய மோசடி இருக்கிறது. இவ்விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால், அவர் என்ன நினைப்பார்?” என்பது ஒன்றன்பின்னொன்றாக வந்துக்கொண்டிருந்தன.

ஒருவனுக்குக் கவலை ஏற்பட்டால் அந்தக் கவலையின் அமுக்கத்திலிருந்து தனது மனதை விடுவித்துக்கொள்ள, அவன் எங்காவது ஒரு மூளையில் ஆறுதலாக உட்கார்ந்து கண்ணீர் கொட்டி அழுவதற்கு விரும்புகிறான். ஆனால் அதற்குக் கூட வசதியான இடம் கிடைக்க வேண்டுமே! அவ்வித வசதியான இடம் கிடைத்ததும் அவன் சந்தோஷத்துடன் அங்கே உட்கார்ந்துகொண்டு தன் துயரம் முற்றிலும் போகும் வரை கண்ணீர் விட்டு அமைதி காண்கிறான்.

Tuesday, April 23, 2024

தொடர் நாவல் : மனக்கண் (4): அத்தியாயம் நான்கு - தங்கமணி - அ.ந.கந்தசாமி -


4-ம் அத்தியாயம்: தங்கமணி


“வழமையான இடம்” என்று கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த இடம் பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சமீபமாக அமைந்திருந்த ஒரு நடை சாலையாகும். உயர்ந்து, தூண்களுடனும் சிமெந்துத் தரையுடனும் விளங்கிய அந்நடைசாலை மாணவர்கள் சந்தித்துப் பேச வாய்ப்பான இடமாயிருந்தது. அந்நடைசாலையின் ஒரு புறத்தில் மேல் வீட்டுக்குச் செல்லும் அகலமான படிக்கட்டுக்கு அருகாமையில் இரண்டு தூண்களுக்கு இடையிலிருந்த இடைவெளியே பத்மாவும் ஸ்ரீதரும் சந்திக்கும் 'வழமையான இடம்.'  இந்த இடத்தைத் தெரிந்தெடுத்துப் பழக்கப்படுத்தியதில் ஸ்ரீதரைவிட பத்மாவுக்கே முக்கிய பங்குண்டு. எவரும் அதிகம் சந்தேகிக்காதபடி 'ஏதோ தற்செயலாகச் சந்தித்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்' என்று எண்ணக்கூடிய முறையில் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசுவதற்கு இது போன்ற நல்ல இடம் கிடையாதென்பதே பத்மாவின் எண்ணம். ஒரு நாள் இக் கருத்தைப் பத்மா கூற, ஸ்ரீதரும் அதை ஏற்றுக் கொண்டு விட்டதால், அதுவே இப்பொழுது ஸ்ரீதரின் எண்ணமுமாகிவிட்டது. பார்க்கப் போனால், நல்ல விஷயத்தைக் கூட இருளில் மூலையில் தனித்திருந்து பேசினால் காண்பவர்களுக்குச் சந்தேகமேற்படுகிறது. ஆனால் அதே விஷயத்தை ஒளிவு மறைவில்லாத திறந்த இடத்தில் இருவர் பேசிக்கொண்டு நின்றால் அவ்வித ஐயப்பாடு ஏற்படுவதில்லை. மற்ற மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களைக் காதலர்கள் என்று சந்தேகிக்கக் கூடாதென்ற எண்ணத்தினாலேயே பத்மாவும் ஸ்ரீதரும் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்திருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே மற்றவர்கள் ஏமாறினார்களா என்பது வேறு விஷயம். ஓர் ஆணுக்கும் பெண்ணும் - சங்க மரபில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் - காதல் ஏற்பட்டதும் அவர்களுக்கு எவ்வளவு கள்ளப் புத்திகள் எல்லாம் தோன்றிவிடுகின்றன! தம்மிடையே இருக்கும் காதலை மறைக்க அவர்கள் எத்தனை உபாயங்களைக் கைக்கொள்கிறார்கள்? அதனால் தான் நமது முன்னோர் காதலைக் களவென்று அழைத்தார்கள். எவ்வளவு பொருத்தமான பெயர்!

மறக்க முடியாத ஆளுமையாளர் சத்தியமூர்த்தி மாஸ்டர்!


அராலி வடக்கில் வசித்த காலத்தில் எம் குடும்பத்துடன் நன்கு பழகியவர்களில் ஒருவர்.  ஆசிரியையான அம்மா மீது மிகுந்த மதிப்பையும், அன்பையும் வைத்திருந்தவர் இவர்.

ஆரம்பத்தில் கட்டுப்பெத்த தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் கற்றவர். அதன் பின் அமெரிக்கா சென்று பட்டப்படிப்பை முடித்தவர். இவ்விதமே நான் அறிந்திருக்கின்றேன். ஊர் திரும்பியவர் ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்று அதனையே தன் வாழ்க்கைத்தொழிலாகத் தொடர்ந்தார். சக மானுடர் மீது பேரன்பு கொண்டவர். அனைவரினதும் அன்பினையும் பெற்றவர்.

எனக்கு இவரைப்பற்றி நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது 1977 ஆம் ஆண்டின் நவம்பர் 30. அன்று ஶ்ரீதர் திரையரங்கில் நண்பர்களுடன்  'தாயைக் காத்த தனயன்' திரைப்படத்தை 'மாட்னி ஷோ'வாகப் பார்த்து மாலை வீடு திரும்பபோது இவர் எனக்காகக் காத்திருந்தார். நான் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது வந்த என்னை அரவணைத்தவாறு வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவ்விதம் செல்கையில் நான் அதிர்ச்சியடையாத  வகையில் என் அப்பா இறந்த செய்தியினைத் தெரிவித்து என்னை ஆறுதல் படுத்தினார்.

உலகப் புத்தக நாள்


இன்று, ஏப்ரில் 23,  உலகப்புத்தக நாள்.  என்னைப்பொறுத்தவரையில் வாசிப்பு என்பது என் மூச்சு போன்றது.  எனக்கு வாசிக்கத்தொடங்கியதிலிருந்து  ஒவ்வொரு நாளுமே புத்தகநாள்தான். எண்ணிப்பார்க்கின்றேன். வாசிப்பும், யோசிப்பும் அற்று ஒரு  நாள் கூடக் கழிந்ததில்லை.

ஆனால் வாசிப்புக்காக ஒரு நாளை ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரும்பாலானவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் , புரியாமல் வாழ்கின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்த இது போன்ற நாளொன்று அவசியமானது.

மானுடர்கள் வாசிப்பின் அவசியத்தை உணரவேண்டும்.  வாசிப்பு எத்தகையாதகவுமிருக்கலாம், ஆனால் அது தேவையான ஒன்று. புனைவாகவிருக்கலாம், அபுனைவாகவிருக்கலாம், கவிதையாகவிருக்கலாம் , இவ்விதம் எத்துறை சார்ந்ததாகவுமிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.

வாசிப்பு சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது. வாசிப்பு இன்பத்தைத்தருகின்றது. வாசிப்பு இருப்புக்கோர் அர்த்தத்தைத் தருகின்றது.

எழுத்து ஒரு கலையாகவிருக்கலாம், தொழில்நுட்ப வழிகாட்டியாகவிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.

புத்தகத்தின் வடிவம் எத்தகையதாகவுமிருக்கலாம். அது அச்சு வடிவிலிருக்கலாம். டிஜிட்டல் வடிவிலுமிருக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சி அதன் வடிவத்தை மாற்றினாலும், புத்தகம் புத்தகம்தான்.
புத்தகங்களை எந்நாளும் வாசிப்போம்.  புத்துணர்வினை, இன்பத்தினை   அடைவோம். படைப்பாற்றலைப் பெருக்குவோம். சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்குவோம். சிந்தனைத் தெளிவை அடைவோம்.
புத்தகங்கள் எம் வழிகாட்டிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள் மட்டுமல்ல, எம் தோழர்களும் கூடத்தான்.

இந்நாளில் நான் இதுவரை வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களை எண்ணிப்பார்க்கின்றேன். அவற்றுக்கு நான் தலை வணங்குகின்றேன். இதுவரை கால என் இருப்பில் என்னுடன் கூடப் பயணித்ததற்காக, என் வாழ்வில் ஓர் அர்த்தம் தந்ததற்காக.

இத்தருணத்தில் இந்நூல்களை எழுதிய எழுத்தாளர்களை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.  அவர்கள்  சமூக, பொருளாதார,அரசியல் சவால்களுக்கு மத்தியில் இயங்கியவர்கள். தம் சிந்தனைகளை மானுடர்களின் வளர்ச்சிக்காக, இன்பத்துக்காக எழுத்தில் வடித்து வைத்தவர்கள்.

Monday, April 22, 2024

எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இன்று - ஏப்ரில் 22 - பிறந்தநாள்.  இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள். இலங்கைத் தமிழ்  இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர். சிறுகதை, கவிதை,நாவல் என இவரது இலக்கியப் பங்களிப்பு இருந்தாலும், முக்கியமான பங்களிப்பு இவரது சிறுகதைகளே என்பேன். இவரது சிறுகதைகள் பல தொகுப்புகளாக (மாற்றம் (1980), உலா (1992), சட்டநாதன் கதைகள் (1995), புதியவர்கள்- (2006),  முக்கூடல் - (2010), பொழிவு - (2016), தஞ்சம் (2018)) வெளியாகியுள்ளன.

இவரது கதைகளைப்பற்றி அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் ஏ.ஜே.கனகரத்தினா 'மென்மையான உணர்வுகளை கலை நயத்தோடும் மனித நேயத்தோடும் வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெறுவதால், ஈழத்துச் சிறுகதை உலகில் சட்டநாதன் தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார்' என்று கூறுவார்.

Sunday, April 21, 2024

எம்ஜிஆரின் 'என் தங்கை'


எம்ஜிஆரின் நடிப்பைப் பார்க்கவேண்டுமானால் பார்க்க வேண்டிய திரைப்படம் 'என் தங்கை' அண்ணன் ,தங்கை பாசத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட உணர்ச்சிகரமான கதை. முடிவில் அவலச்சுவை மிகுந்தது.
எம்ஜிஆர் தன் ஆரம்ப காலத்தில் சமூகப்படங்கள் பலவற்றில் நடித்திருக்கின்றார். அந்தமான் கைதி, நாம், என் தங்கை , பணக்காரி அவற்றில் சில. 

Friday, April 19, 2024

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!


    எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'சக்கரவர்த்தித் திருமகள்'. ப.நீலகண்டனின் இயக்கத்தில் , ஜி.ராமநாதனின் இசையில், வெளியான இப்பாடலை சீர்காழி கோவிந்தராஜன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பாடியிருப்பார்கள. இப்பாடலை எழுதியிருப்பவர் ஒரு நடிகர். இவர் அக்காலகட்டத்தில் பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார். 'கிளவுன் சுந்தரம்' (‘Clown’ M. S. Sundaram) என்றறியப்பட்டவர். இவரது புகைப்படங்கள் வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Wednesday, April 17, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-


அத்தியாயம் ஐந்து:   இருப்பின்  புதிரொன்றும் , நங்கையுடனான சந்திப்பும்!


"நான் மாதவன். யுனிட் 203இல் வசிப்பவன்.  போஸ்ட்மன் தவறுதலாக உங்களுக்குரிய கடிதத்தை என் தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்று விட்டார். உள்ளே ஏதோ ஒருவிதமான அட்டை  , கடன் அட்டை அல்லது  வங்கி அட்டையாகவிருக்கலாம், இருப்பதுபோல் தெரிகிறது.  அதனால்தான் அதனைக்க் கொடுப்பதற்காக இங்கு வந்தேன்" இவ்விதம் ஆங்கிலத்தில் கூறினான் மாதவன். அத்துடன் கடிதத்தையும் அவளிடம் கொடுத்தான்.

அதற்கு அவள் பதிலாக , ஆங்கிலத்தில் "ஓ. மிகவும் நன்றி. இவ்விதம் நேரமெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதனை மிகவும் மதிக்கின்றேன். இன்னுமொன்று .. நீங்கள் கேரளக்காரரா? உங்கள் பெயர் அங்கு பிரசித்தமானது. அதிகமாகப் பாவிக்கப்படும் பெயர்களில் ஒன்று" என்று கேள்வியுடன் கூடிய பதிலளித்தாள்.

"நான் கேரளக்காரன் அல்ல. தமிழ்நாட்டுக்காரனும் அல்ல. ஶ்ரீலங்கன். நீங்களும் ஶ்ரீலங்காவா" என்றான் மாதவன்.

இதற்கு அவள் இலேசாக முறுவலித்தபடியே "இல்லை, நான் தமிழ்நாட்டுக்காரி. தஞ்சாவூர்க்காரி. ஆனால் அம்மா ஶ்ரீலங்காக்காரி" என்றாள்.

இதைக்கேட்டதும் அவன் பதிலுக்கு முறுவலித்தபடி ' அப்போ நீங்கள் தமிழச்சி. உங்களுடன் தமிழிலேயே கதைக்கலாம்."

இதற்குப் பதிலாக "தாராளமாக' என்றவள் " தொடர்ந்து  "உள்ளே வாருங்கள். ஒரு கப் தேநீர் அருந்தலாம்"  என்றாள்.

Infowhiz Systems's Services: domain registration, hosting, web design, online security, and email!


இன்ஃபோவிஷ் சிஸ்டம்ஸ் (Infowhiz Systems) domain registration, hosting, web design, online security, and email ஆகிய சேவைகளை நியாயமான விலையில் வழங்குகின்றது. அதன் சேவைகளைப் பாவியுங்கள்! பயனடையுங்கள்!



https://www.infowhizsystems.com/

Monday, April 15, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (4) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் நான்கு: பக்கத்து வீட்டுப் பெண்!


மறுநாள் நேரத்துடன் எழுந்து விட்டான் மாதவன். அன்று அவன் நாளை எவ்விதம் கழிக்க வேண்டுமென்று சில திட்டங்கள் வைத்திருந்தான். நண்பகல் வரையில் 'ஒன் லை'னில் வேலை தேடுவது. கல்வித் தகமைகளை இணையத்தில் அதிகரிக்க உதவும் பயிற்சிக் காணொளிகளை, கட்டுரைகளை ஆராய்வது எனத் திட்டமிட்டிருந்தான். தகவற் தொழில் நுட்பத்தில் அவனுக்கு இலவசமாகக் கிடைக்கும், அதே சமயம் பலரால் , நிறுவனங்களால் பாவிக்கப்படும் லினக்ஸ் 'ஒபரேட்டிங் சிஸ்டம்' பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது எனத் தீர்மானித்திருந்தான். தகவல் தொழில் நுட்பத்துறையைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் நுட்பம் பற்றிய அறிவும், அனுபவமும் இருந்தால் அவை போதுமானவை அத்துறையில் வேலையொன்றைப் பெறுவதற்கு என்பது அவனது எண்ணம்.

அதே சமயம் அவனுக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பிக்க வேண்டுமென்பது நீண்ட  காலத்து எண்ணம்.அது பற்றியும் இன்று முடிவொன்றினை எடுத்து, அதற்கான அத்திவாரத்தை இன்று உருவாக்க வேண்டுமென்றும் ஏற்கனவே தீர்மானித்திருந்தான். தன் பல்வகைப்பட்ட சிந்தனைகளையும் இணையத்தில் பதிவு செய்வதன் மூலம், வாசிப்பவற்றைப்பற்றிய மற்றும் பல்வகைப்பட்ட சொந்த அனுபவங்களையெல்லாம் அவ்வலைப்பதிவில் பதிவு செய்வதன் மூலம் மனப்பாரம் குறையும், சிந்தனைத்தெளிவு பிறக்கும், வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்தாற்றலும் அதிகரிக்கும். ஓர் எழுத்தாளனாவது அவனது முக்கிய எண்ணமாக இருக்கவில்லை. ஆனால் எழுவதுவதில் ஆர்வம் மிக்கவனாக அவனிருந்தான். அவ்வார்வத்துக்கு வடிகாலாக அவனது எழுத்துகள் இருக்குமென்றும் எண்ணிக்கொண்டான்.

Tuesday, April 9, 2024

சூரிய கிரகணமும் எம் அந்தர இருப்பும்!


நேற்று நடந்த சூரிய கிரகணம் தற்போதுள்ள சூழலில் மனித வாழ்நாளில் ஒரே தடவையே பார்க்கக் கூடியதொரு வானியல் நிகழ்வு.  எதிர்காலத்தில் மருத்துத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுட வாழ்வைப் பல நூறு வருடங்களுக்கு அதிகரிக்குமென்பது அறிவியல் அறிஞர்களின் நம்பிக்கை. அதுவரை இது முக்கியமானதொரு மானுட வாழ்நாளில் பார்க்க வேண்டியதொரு வானியல் நிகழ்வு.

கணத்துக்குக் கணம் விரிந்துகொண்டிருக்கும் பெரு வெளியில் , பெரு வேகத்துடன் விரைந்து கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகியவற்றின் அந்தர இருப்பையும், அதில் இருக்கும் எம் இருப்பையும் புரிய வைத்த, உணர வைத்த அற்புதமானதொரு நிகழ்வு.  எமது இருப்பு எவ்வளவு ஆச்சரியமானது. நாமிருக்கும் பூமி விரையும் வேகம் எமக்குத் தெரிவதில்லை. அதை நாம் உணர்வதில்லை. ஆனால் வானில், நம்மைச்சுற்றி எல்லாமே இயங்கிக்கொண்டுதானுள்ளன. ஒரு கணமேனும் ஓய்வற்ற ஓயாத இயக்கங்களுக்குள் இயங்கிக்கொண்டிருக்கினறோம். எல்லாமே ஓய்வற்று இயங்கிக்கொண்டிருக்கின்றன.


இவ்விதமான நிகழ்வுகள் எமக்கு இப்பிரபஞ்சத்தில் எம் இருப்பைப் புரிய வைக்கின்றன. எம்மைப்பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. இவை பற்றியெல்லாம் சிந்தித்தால், உணர்ந்தால் கணத்துக்குக் கணம் இப்பூமியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இரத்தக்களரிகள், போர்கள், மனித உரிமை மீறல்கள், குற்றச் செயல்களையெல்லாம் நாம் புரிவோமா?

அவ்வகையில் முக்கியமானதொரு வான் நிகழ்வு, அற்புதமானதொரு நிகழ்வு.  பிரபஞ்சத்தின்  நேர்த்தியை, வடிவமைப்பைப் புரிய வைக்கும் சிறு துளியென்றாலும் அச்சிறு துளிக்குள் பொதிந்து  கிடக்கின்றது மானுட சிந்தனைத் தேடலுக்கான  விடையொன்றின்  சிறு துளி.

Wednesday, April 3, 2024

காங்கிரஸ் நூலகமும், 'வேர்ல்கட்' (Worldcat) இணையத்தளமும், அவற்றின் பயனுள்ள சேவைகளும்! - வ.ந.கிரிதரன்

'அமெரிக்க காங்கிரஸ்' (The Library of Congress) , https://www.loc.gov/, நூலகத்தில் பயனுள்ள தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. சுமார் 10,000ற்கும் அதிகமான தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. எனது மண்ணின் குரல் (1998) , அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடுகளாக வெளியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (சிறுகதைத்தொகுப்பு), வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ஆகிய நூல்களை அங்கு கண்டு வியந்து போனேன்.
Worldcat.org பயன்மிக்கதொரு தளம். இதில் அங்கத்தவர்களாகவுள்ள , உலகின் பல பாகங்களிலுள்ள நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய விபரங்களைத் தருமொரு தளம். ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தளம். எனது நூல்கள் பல யாழ் பொதுசன நூலகம், யாழ் பல்கலைககழக நூலகம், பேராதனைப் பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றிலுள்ளன. ஆனால் அவை பற்றிய விபரங்களை வேர்ல்கட் இணையத்தளத்தில் தேடியபோது காணவில்லை. அந்நூலகங்கள் 'வேர்ல்கட்'டில் அங்கத்தவர்களாக இன்னும் இணையவில்லையென்று நினைக்கின்றேன். அந்நூலகங்கள் இணைவது பலருக்கும் பயனுள்ளதாக அமையும். இணைவது பற்றி இந்நூலகங்கள் சிந்திக்க வேண்டும்.

Tuesday, April 2, 2024

ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்'. வினோபா பாவேயின் பூதான இயக்கத்தூண்டுதலால் வெளியான முதலாவது தமிழ் நாவல்! - வ.ந.கிரிதரன் -

                                                     -எழுத்தாளர்  ஜெகசிற்பியன் -

எழுத்தாளர் ஜெகசிற்பியனின் நாவலான 'மண்ணின் குரல்' பற்றி நான் அறிந்தது தற்செயலானது. என் பால்யப் பருவத்தில் கல்கியில் தொடராக வெளியான் சமூக நாவல்களான  கிளிஞ்சல் கோபுரம், ஜீவ கீதம், காணக்கிடைக்காத தங்கம்,  சரித்திர நாவல்களான 'பத்தினிக்கோட்டம்' , மற்றும் 'நந்திவர்மன் காதலி' (ராணி முத்து) மூலம் எனக்கு அறிமுகமானவர். ஆனால் இந்த நாவலான 'மண்ணின் குரல்' கல்கியில் வெளிவராத நாவல்.  மலேசியாவிலிருந்து வெளியான 'தமிழ் நேசன்' பத்திரிகையில் வெளியான  தொடர் நாவல்.

Monday, April 1, 2024

புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ - வ.ந.கிரிதரன் -


எழுநா சஞ்சிகையின் ஏப்ரில் 2024 இதழில் வெளியான எனது கட்டுரை புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’


காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை  நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க வேண்டும். பண்ணைவாசிகள் அங்கிருந்து நடந்தே பண்ணைக்குச் செல்ல வேண்டும். இத்தூரத்தைக் குறைப்பதற்காக காஞ்சிரமோடைக் காட்டினூடு பாதை அமைப்பதும் அத் தன்னார்வத் திட்டத்தின் ஓரம்சம். அத்திட்டத்தின் மூலம் அப் பண்ணைவாசிகளின் பயணம் இலகுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும் என்று தீர்மானிக்கப்பட்டது.

காந்தியம் அமைப்பின் நாவலர் பண்ணையின் முக்கிய காரணங்களில் ஒன்று எல்லைப் பகுதியைப் பாதுகாப்பது. அத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றவர்களில் நானுமொருவன். அப்பொழுது நான் என் படிப்பை முடித்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அப்பகுதி மக்கள் அக்காட்டுப் பகுதியைக் ‘காஞ்சிரமொட்டை’ என்றே அழைத்தார்கள். ஆனால் அதன் உண்மையான பெயர் காஞ்சிரமோடை. பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியம்’ நூலின் முன்னுரை அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை விரிவாகவே எடுத்துரைக்கின்றது.

இச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி பற்றி பேராசிரியர் புஷ்பரட்ணம் போன்றோர் ஏதாவது ஆய்வுகள் செய்திருக்கின்றார்களா அல்லது அது பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை. முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் ஒன்றான இப்பகுதி இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை எடுத்துக்காட்டும் பகுதி என்பதால் ஆய்வுகளை வேண்டி நிற்கும் பகுதிகளில் ஒன்று.

Sunday, March 31, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (3) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் மூன்று: புதிய உலக ஒழுங்கும், கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' சிந்தனையும்!


அன்று முழுவதும் கட்டடக்காட்டில் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். அலைதலுடன் அன்று காலை அவன் மார்க்குடன் நடத்திய உரையாடலும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. அன்பின் ஆதிக்கமே உயிரினங்களுக்கு மத்தியில் காணப்படும் படைப்பின் இயல்பென்றால் அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருந்தது. ஏன்?  ஏன் இவ்விதம் இந்த உலகு படைக்கப்பட்டுள்ளது. இது இவ்விதம் உருவாகக் காரணமென்ன? இதுவரை காலமும் இன்பமளித்துக்கொண்டிருந்த இயற்கையெழிலும், பல்வகை உயிரினங்களும் இப்போது அவனுக்கு முன்புபோல் இன்பத்தைத்தரவில்லை. இயற்கையின் எழிலுக்குப் பின் மறைந்து கிடக்கும் துயரமும், பாசச் சுமையினால் வாடும் உயிரினங்களும் அவனது மனத்தை வாட்டியெடுத்தன. ஏன்? ஏன்? ஏன்? படைப்பின் மாபெரும் கறையாக இந்த துயரைச் சுமந்திருக்கும் அன்பின் ஆதிக்கம் அவனுக்கு இப்போது தென்பட்டது.

Saturday, March 30, 2024

புலம்பெயர் தமிழ் இலக்கியம்: 'பனியும் பனையும்'


புகலிடத்தமிழ் இலக்கியப்பரப்பில் பல சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இன்றும் வெளியாகிக்கொண்டுள்ளன. இவற்றில் முதலில் வெளியான முக்கிய தொகுதி மித்ர பதிப்பக வெளியீடான 'பனியும் பனையும்'.
எழுத்தாளர்கள் எஸ்.பொ & இந்திரா பார்த்தசாரதி தொகுத்த தொகுப்பில் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா வரையில் , பல்வேறு நாடுகளில் வாழும் 39 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு.
 
பதிப்பு விபரம்: பனியும் பனையும்;: புலம்பெயர்ந்த 39 கலைஞர்களின் புதுக்கதைகள். இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொ. சென்னை 24: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (சென்னை 94: கோகில ஸ்ரீ பிரின்டர்ஸ்) 404 பக்கம். விலை: இந்திய ரூபா 75. அளவு: 18*12 சமீ.

Friday, March 29, 2024

'ஜீவகீதம்' ஜெகசிற்பியன் - ஜீவி - (எழுத்தாளர் ஜீவியின் 'பூவனம்' வலைப்பதிவிலிருந்து)


 
என் பால்ய, பதின்மப் பருவங்களில் என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜெகசிற்பியன். கல்கியில் வெளியான இவரது நாவல்களான 'கிளிஞ்சல் கோபுரம்', 'ஜீவகீதம்', 'சொர்க்கத்தின் நிழல்', 'பத்தினிக்கோட்டம்' என்னிடம் பைண்டு செய்யப்பட்ட நிலையிலிருந்தன. இவரது இன்னுமொரு சரித்திர நாவலான 'நந்திவர்மன் காதலி' (ராணிமுத்து பிரசுரமாக வெளியானது) எனக்கு மிகவும் பிடித்த வரலாற்று நாவல்களிலொன்று.
 
எழுத்தாளர் ஜீவி அவர்கள் தனது 'பூவனம்' வலைப்பதிவில் சிறப்பானதொரு ஜெகசிற்பியன் பற்றிய நனவிடை தோய்தலைச் செய்துள்ளார். அதனை நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
 

Wednesday, March 27, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்!


மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ' மாநகர் விரிந்து கிடந்தது. தெற்காகத் திரும்பிப் பார்த்தான். தொலைவில் உயர்ந்த கட்டடங்கள் தெரிந்தன. 'கனடா வாத்து'க் கூட்டமொன்று V வடிவில் பறந்துகொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் சில கூட்டமாகக் கடுகிச் சிறகடித்து மறைந்தன. அவன் வசித்து வந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கு அருகிலிருந்த மேப்பிள் இலை மரமொன்றிலிருந்து மெல்ல மெல்ல இறங்கிய கறுப்பு அணிலொன்று புஸ் புஸ்ஸென்று வளர்ந்திருந்த வாலை ஆட்டியபடி மெல்ல அவனைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்தது. பின் ஏதோ திருப்தி அடைந்ததுபோல் தன் காரியத்தில் மூழ்கி விட்டது. புல் மண்டிக்கிடந்த தரையில் உனவு தேடும் அதன் வேலையில் மூழ்கிவிட்டது. மாதவன் சிறிது நேரம் அதன் அசைவுகளைப் பார்த்து நின்றான். ஒரு கணம் அந்த அணில் பற்றிய சிந்தனைகள் அவன் சிந்தையில் ஓடின. இந்த அணிலின் இருப்பு எவ்வளவு சிறியது என்று நினைத்துக்கொண்டான். இந்த மரம்,இதனைச் சுற்றியுள்ள சிறு பிரதேசம் .. இவையே இதன் உலகம். மரத்திலுள்ள கூடும், மரத்தைச் சுற்றியுள்ள அயலுமே அதன் உலகம். ஒவ்வொரு நாளும் தன் இருப்புக்காக உணவு தேடுவதே அதன் முக்கிய பணி. அவ்விதம் இருப்பைத்தக்க வைப்பதற்கு முயற்சி செய்கையில் அதனைப் பலியெடுத்துத் தம் இருப்பைத்தக்க வைக்கும் ஏனைய உயிரினங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற அது மிகவும் எசசரிக்கையுடன் இருக்க வேண்டும். பார்வைக்கு மிகவும் எளிமையாகத் தென்படும் அதன் வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை என்று ஒருமுறை தனக்குள் எண்ணிக்கொண்டான் அவன். அந்த எண்ணத்துடன் மீண்டும் அந்த அணில்மேல் பார்வையைத் திருப்பியபொழுது இப்போது அந்த அணில் அவனது இதயத்தை மிக நெருங்கி வந்து விட்டிருந்தது.

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்